சென்னையில் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பக்கவாதம் (Stroke) காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜா சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறப்பு மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும், சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பேசும் அளவிற்குத் தேறியிருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், இன்று மருத்துவமனைக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எச்.ராஜாவின் குடும்பத்தினரைச் சந்தித்து அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். அவர் விரைவில் முழுமையான உடல்நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொண்டார். முதலமைச்சருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் சென்று நலம் விசாரித்தார்.



