காதலித்து வந்த பெண் திடீரென திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், ஆத்திரமடைந்த காதலன் அந்தப் பெண் உட்பட 11 பேரை சரமாரியாக தாக்கி வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் ஃபிரங்கிபுரத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த பிரகாசம் பந்துலு தெருவைச் சார்ந்த மணிகண்டன் (23) என்ற இளைஞர் காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணும் மணிகண்டனை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் திடீரென அந்தப் பெண்ணுக்கு வெறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனையறிந்த மணிகண்டன், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால், மணிகண்டனை திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை என அந்த பெண் தெரிவித்துவிட்டார். ஆனாலும், இந்த விவகாரத்தில் இரண்டு குடும்பத்தினரையும் அழைத்து பேசி பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம் என மணிகண்டன் பெண்ணின் குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, அந்த பெண்ணின் பெற்றோர்களும் மணிகண்டனின் குடும்பத்தாரும் சமாதானம் பேசினர். அப்போது மணிகண்டன் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அது ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது. அப்போது மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்கள் அந்தப் பெண்ணின் குடும்பத்தினரை சரமாரியாக தாக்கினர்.

இதில் 2 இளம் பெண்கள் உட்பட 11 பேர் காயமடைந்தனர். அதில், ஒன்பது பேர் நரசராவ் பேட்டை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலத்த காயம் அடைந்த அந்த பெண் மற்றும் அவரது உறவினர்கள் குண்டூர் ஜிஎச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது பெண்ணின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்திய காதலன் மணிகண்டன் தலைமறைவாகியுள்ளான். மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் அடையாளம் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குண்டூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.