கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கரூர் சம்பவத்தில் முறையாக விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி கரூர் காவல்துறையினர், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
விசாரணைக்காக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அவர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே கரூரில் கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது என்பதை கண்டறிய மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா ஹேமமாலினி தலைமையில் உண்மை கண்டறியும் குழு அமைத்தார்.
ஹேமமாலினி, ஆனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, ரேகா ஷர்மா உள்ளிட்ட 8 எம் பிக்கள் இந்த குழுவில் உள்ளனர். அதன்படி பாஜக குழு இன்று கரூர் சென்று ஆய்வு செய்யவுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர். ஹேமமாலினி தலைமையிலான பாஜக குழுவினர் கோவைக்கு விமானம் மூலம் இன்று வந்தனர். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துவிட்டு கரூர் புறப்பட்டனர்.
கோவையில் இருந்து கரூர் கிளம்பிச் சென்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் குழுவினரின் கார் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் காரின் முன்புற பகுதி சேதமடைந்தது. ஹேமமாலினி சென்ற காரின் பின்பகுதியில் லேசான சேதமடைந்தது. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படாத நிலையில் குழுவினர் அதே காரில் கரூர் புறப்பட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Read more: இந்த ஊழியர்களுக்கு 1 மாத சம்பளம் போனஸ்..! மத்திய அரசு சொன்ன குட்நியூஸ்..!