வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் ஒரு பெரும் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், அதைத் தொடர்ந்து நகரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.. இந்த குண்டுவெடிப்பு, இஸ்லாமாபாத்தின் ஷாசாத் டவுன் பகுதியில் உள்ள தர்லாய் இமாம்பர்காவில் நிகழ்ந்தது. இது தற்கொலை படை தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது..
வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு சிறிது நேரத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த 22 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று முதலில் தகவல் வெளியானது.. ஆனால் தற்போது பலி எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (PIMS) கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
பாகிஸ்தான் படைகள் பலுசிஸ்தான் மாகாணத்தில் ‘ரத்-உல்-ஃபித்னா-1’ என்ற பெயரில் ஒரு பெரிய இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியுள்ள நேரத்தில் இஸ்லாமாபாத்தில் இந்த தற்கொலைத் தாக்குதல் நடந்துள்ளது. ஜனவரி 26 அன்று தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கையில், பாகிஸ்தான் படைகள் 216 பலூச் கிளர்ச்சியாளர்களைக் கொன்றுள்ளன. இருப்பினும், இந்த நடவடிக்கையில் 22 பாதுகாப்புப் படையினர் மற்றும் 36 பொதுமக்களும் உயிரிழந்தனர்.
பலுசிஸ்தான் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானை எல்லையாகக் கொண்டுள்ளது, மேலும் அங்கு நீண்ட காலமாக ஒரு கிளர்ச்சி நடந்து வருகிறது. பலூச் குழுக்கள் சுதந்திரம் கோருகின்றன, மேலும் பாகிஸ்தான் படைகளையும், 60 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) தொடர்பான திட்டங்களையும் குறிவைத்துத் தாக்கி வருகின்றன.
கடந்த மூன்று மாதங்களில் இஸ்லாமாபாத்தில் நடந்த இரண்டாவது தற்கொலைத் தாக்குதல் இதுவாகும். கடந்த ஆண்டு நவம்பரில், இஸ்லாமாபாத் மாவட்ட நீதித்துறை வளாகத்தில் நடந்த ஒரு தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 27 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வியின் கூற்றுப்படி, அந்த தற்கொலை குண்டுதாரி “வளாகத்திற்குள் நுழையத் தவறியதால்”, நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு காவல்துறை வாகனத்திற்கு அருகில் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : எப்ஸ்டீன் இன்னும் உயிருடன் இருக்கிறாரா..? சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் புதிய ஆவணம்.. உண்மை என்ன?



