சுவிஸ் பனிப்பாறையின் பெரிய ராட்சத குவியல் சரிந்து விழுந்ததில் பள்ளத்தாக்கில் இருந்த ஆல்பைன் கிராமம் முழுவதும் மண்ணுக்குள் புதைந்த அதிர்ச்சி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்திய ஐரோப்பிய நாடான ஸ்விட்சர்லாந்து, மலைத்தொடராலும் பனி மலைகளாலும் சூழப்பட்டுள்ள நாடாகும். ஐரோப்பாவில் அதிக எண்ணிக்கையிலான பனிப்பாறைகளுக்கு தாயகமாக இந்த நாடு உள்ளது. பனிப்பாறைகள் சுற்றுச்சூழல் அமைப்புக்கு மட்டுமல்ல, சுவிட்சர்லாந்தில் சுற்றுலாவிற்கும் மையமாகவும் உள்ளன. இங்குள்ள மலை கிராமமான பிளாட்டன், பிர்ச் பனிப்பாறை அடிவாரத்தில், பெர்னீஸ் ஆல்ப்ஸால் சூழப்பட்ட ஒரு பள்ளத்தாக்கில் அமைந்திருந்தது. பிர்ச் பனிப்பாறை சிதைந்துவிடும் என்ற அச்சம் காரணமாக, கிராமத்தில் வசித்த 300க்கும் மேற்பட்ட மக்களில் பெரும்பாலோர் முந்தைய வாரம் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று பிற்பகலில் பனிப்பாறை சரிந்ததால் பிளாட்டன் கிராமம் பெரும்பகுதி புதைந்தது. 125 ஆண்டுகளில் இது போன்ற ஒரு நிலை முதன்முறையாக, இப்போதுதான் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, அதிபர் கரின் கெல்லர்-சுட்டர் பகிர்ந்த ட்ரோன் படம், முழு கிராமம், அந்த வழியாக ஓடும் லோன்சா நதி, அதைச் சுற்றியுள்ள நிலப்பரப்பு சேற்றில் புதைந்துள்ளதை காட்டியது. உள்ளூர் கவுன்சிலர் ஸ்டீபன் கான்சர் சுவிஸ் ஊடகங்களிடம், அழிவுகரமான மண் மற்றும் பாறை சரிவு “முதல் பார்வையில் கிராமத்தின் 90% ஐ மூடிவிட்டது” என்று தெரிவித்தார்.