கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதி இருந்தும், விடுப்பட்டவர்களை இணைக்கும் நோக்கில் மக்களுடன் முதல்வர் முகாம் நடத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தற்போது 1.14 கோடி பேர் பயனடைந்து வரும் நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க உள்ளது. தமிழ்நாடு அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கும் வகையில், “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டத்தை கடந்த 2023ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின்படி, மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில், இத்திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு தற்போது மீண்டும் ஒரு சூப்பர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (04.06.2025) தமிழ்நாடு முழுவதும் 9,000 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
ஒவ்வொரு தாலுகாவிலும் மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு முகாம் நடைபெறுகிறது. எனவே, விசாரித்து தாலுகா அலுவகத்திற்கு சென்று இன்று முதல் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 பெற நீங்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் கேட்கப்பட்டிருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் சரியான விவரங்களை கொடுக்க வேண்டும். சிறு தவறு ஏற்பட்டால் கூட விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
அந்த விண்ணப்பத்தில் மகளிரின் பெயர், ஆதார் எண், ரேஷன் அட்டை எண், மொபைல் நம்பர், வீட்டு முகவரி, அது சொந்த வீடா..? அல்லது வாடகை வீடா..? என்ற விவரம், திருமண நிலை, வங்கியின் பெயர், வங்கி கணக்கு எண், மின் இணைப்பு எண் உள்ளிட்ட விவரங்களை நிரப்ப வேண்டும். எனவே, இதையெல்லாம் முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்வது நல்லது. அதேபோல், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், மின் இணைப்பு ரசீது ஆகியவற்றை ஓரிரு நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரிஜினலையும் கையில் வைத்துக் கொள்ளுங்கள்.
விண்ணப்பித்த பின், உங்கள் விண்ணப்ப நிலையை https://kmut.tn.gov.in/ என்ற இணைப்பை பயன்படுத்தி தெரிந்துக் கொள்ளலாம். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா, இல்லையா என்பது நீங்கள் கொடுத்திருக்கும் மொபைல் எண்ணுக்கு மெசேஜாக வந்துவிடும்.