இந்தியாவில் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலங்கள் பெரும்பாலும் நாள்தோறும் ஆகம விதிமுறைகளின்படி, 5 முதல் 6 காலப் பூஜைகளுடன் நடத்தப்படுவது வழக்கம். கிராமப்புறக் கோவில்களில் விசேஷ நாட்களில் மட்டுமே சிறப்புப் பூஜைகள் நடந்தாலும், பெரும்பாலான ஆலயங்கள் தினந்தோறும் திறந்தே இருக்கும்.
ஆனால், கர்நாடக மாநிலம் ஹாசன் நகரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஹாசனாம்பா அம்மன் கோவில் முற்றிலும் விதிவிலக்கானது. இந்தக் கோவில், ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, அதிகபட்சமாக 10 நாட்கள் மட்டுமே நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்குத் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. மற்ற நாட்களில் கோவிலின் நடை மூடப்பட்டே இருக்கும்.
ஹாசனாம்பா கோவிலின் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், தீபாவளி நேரத்தில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் முடிந்த பிறகு, கோவில் நடை சாத்தப்படும்போது ஏற்றப்படும் தீபம், அடுத்த ஆண்டு தீபாவளிக்கு நடை திறக்கப்படும் வரையிலும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் என்பதுதான். அதேபோல், அம்மனுக்கு அணிவிக்கப்படும் பூவும் ஓராண்டு காலத்திற்கு வாடாமல் அப்படியே இருக்கும் என்பதும் பக்தர்களை வியப்பில் ஆழ்த்தும் அதிசயம் ஆகும். இத்தகைய சிறப்பு மிக்க இந்தக் கோவிலின் நடை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய முறைப்படி, மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த நஞ்சராஜ அர்ஸ் வாழை மரத்தை வெட்டி, கோவில் நடையைத் திறந்து சிறப்புப் பூஜை செய்வது வழக்கம். பின்னர், அரசு கருவூலத்தில் உள்ள நகைகள் ஹாசனாம்பா சிலைக்குப் பாதுகாப்புடன் அணிவிக்கப்படும். 10 நாட்களுக்கு கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் நிலையில், 7 நாட்களுக்கு மட்டுமே மக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.



