புதிய கீதை முதல் THE GOAT வரை.. விஜயின் படங்கள் சந்தித்த சர்ச்சைகளும்.. வெளியீட்டில் எழுந்த சிக்கல்களும் ஒரு பார்வை..!!

vijay controvercy

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சாம்ராஜ்யம் கட்டியெழுப்பியவர் தளபதி விஜய். ரசிகர்களின் ஆதரவை மிகுந்த அளவில் பெற்றிருக்கும் இவர் நடித்த திரைப்படங்கள் வெளியாவும் நேரங்களில் ரசிகர்கள் கொண்டாடும் பண்டிகை போல் அமைகின்றது. ஆனால், இதன் மறுபுறமாக அவரது படங்கள் ஒவ்வொன்றும் சர்ச்சைகள் இல்லாமல் வெளிவந்ததாக சொல்ல முடியாது.


படப்பிடிப்பில் தொடங்கி, விளம்பர நிகழ்வுகள், அரசியல் கருத்துகள், வரிப்பணங்கள், நீதிமன்ற நடவடிக்கைகள் என ஒவ்வொரு படத்திற்கும் ஒரு சர்ச்சை இருந்தே தீரும். இந்த கட்டுரையில், தளபதி விஜய்யின் முக்கியமான சில படங்களைச் சுற்றி எழுந்த சர்ச்சைகள் பற்றி பார்ப்போம்.

புதிய கீதை: இயக்குநர் ஜெகன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருந்த ‘புதிய கீதை’ திரைப்படம், கடந்த 2003-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்திற்கு கீதை என்றுதான் முதலில் பெயர் வைக்கப்பட்டது. ஆனால், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு ‘கீதை’ என்று பெயர் வைக்கக் கூடாது என இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து படத்திற்கு ‘புதிய கீதை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு படம் வெளியானது.

காவலன்: தளபதி விஜய் நடித்த திரைப்படங்களை எப்போதும் எதிர்பார்ப்போடு எதிர்நோக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள், 2011-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவிருந்த ‘காவலன்’ படத்திற்கும் பெரிதும் ஆவலாக காத்திருந்தனர். மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பாடிகார்டு’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவான இப்படம், வெளியாவுவதற்கு முன்பே பல்வேறு தடைகள் எழுந்தன.

விஜயின் 50-வது படமாக வந்த ‘சுறா’ (2010) திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியதோடு, திரையரங்கு உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் மோசமான நஷ்டத்தை ஏற்படுத்தியது. தோல்விக்கு நஷ்டஈடு கேட்டு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் ‘காவலன்’ படத்தை வெளியிட மாட்டோம் என்றார்கள். அதேவேளையில் படத்தை வெளியிடக் கோரி ரசிகர்கள் போராட்டம் நடத்தினர். கடைசியாக விஜய் நஷ்ட ஈடு கொடுத்ததைத் தொடர்ந்து ‘காவலன்’ திரைப்படம் திரையிடப்பட்டது.

துப்பாக்கி: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘துப்பாக்கி’. இந்தப் படத்தின் தலைப்பை மாற்றக் கோரி ‘கள்ளத்துப்பாக்கி’ படக் குழுவினர் வழக்குத் தொடர்ந்தனர். பின்னர் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் அவர்கள் வழக்கை திரும்பப் பெற்றதால், இந்தப் படத்தின் மீதான தடை நீங்கியது. அதன்பிறகு இஸ்லாமியர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, படத்திற்கு தடைக்கோரி பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தின. பின்னர் குறிப்பிட்ட சில காட்சிகள் நீக்கப்படுவதாகவும், சிலக் காட்சிகள் மியூட் செய்யப்படுவதாகவும் தெரிவித்தப்பின் போராட்டம் கைவிடப்பட்டது. அதன்பிறகே இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது.

தலைவா: தளபதி விஜய் நடிப்பில், ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவான ‘தலைவா’ திரைப்படம், 2013-ம் ஆண்டின் முக்கியமான மற்றும் சர்ச்சைக்குரிய திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. அரசியல் அடையாளங்களோடு வெளியான இப்படம், திரையரங்கிற்குள் வருவதற்கே தடைகள் ஏற்பட்ட ஒரு பரபரப்பான காலத்தை தமிழ்நாடு கண்டது.

திரையரங்குகளில் வெடிகுண்டு வைக்கப்படும் என்று அரசுக்கு மர்ம கடிதம் வந்ததாகக் கூறி, பாதுகாப்பு கருதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு தடை விதித்தது. இதனால், மற்ற மாநிலங்களில் குறிப்பிட்டப்படி படம் வெளியான நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் வெளியாகவிருந்த தேதியிலிருந்து 11 நாட்கள் கழித்துதான் இந்தப்படம் வெளியானது. பட வெளியீட்டு பிரச்சனையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு அவரை மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலைமை வரை போனது குறிப்பிடத்தக்கது.

கத்தி: தளபதி விஜய் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகி, 2014-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான ‘கத்தி’ திரைப்படம் தமிழகத்தில் வெளியீட்டுக்கு முன்பே பெரும் சர்ச்சையில் சிக்கியது. இந்தப் படத்தை தயாரித்ததாகக் கூறப்பட்ட லைகா நிறுவனம், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு நெருக்கமானது என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தமிழ்த்திரைப்படத்தைத் தடுப்பதற்காக தமிழகத்தில் பல ஈழ ஆதரவு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களில் நடந்த போராட்டங்களில் ‘கத்தி’ பட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பின்னர், லைகா நிறுவனம் தயாரிப்பு விநியோக உரிமையை மட்டும் பெற்றுள்ளதாக விளக்கம் வழங்கப்பட்டது. தளபதி விஜயும், படக்குழுவும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, போராட்டம் ஓரமாக்கப்பட்டது. இதனையடுத்து படம் திட்டமிட்டபடி வெளியானது.

மேலும், இப்படம் கோபி நயினார் என்ற எழுத்தாளரின் கதையை திருடி இயக்கப்பட்டது எனவும், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கு எதிராக அவர் புகார் அளித்தார். இது நீண்ட நாட்கள் ஊடகங்களில் விவாதமாக இருந்தது. இந்த இரட்டை சர்ச்சைகள் இருந்தும், ‘கத்தி’ திரைப்படம் வெளியானதும் வசூலில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

தெறி: தளபதி விஜய் மற்றும் சமந்தா நடிப்பில், அட்லீ இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘தெறி’ திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், அதன் வெளியீட்டில் பெரும் குழப்பம் நிலவியது. இந்தப் படத்தை தயாரித்த நிறுவனம், அதிக விலைக்கு விநியோக உரிமைகளை விற்பனை செய்ய முனைந்ததுடன், மினிமம் கேரண்டி முறையில் வாங்கக் கூறி வற்புறுத்தியதாக விநியோகஸ்தர்கள் குற்றம்சாட்டினர். இதனால், தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் உருவானது.

இதன் விளைவாக, செங்கல்பட்டு விநியோகப் பகுதி உட்பட்ட பல முக்கிய திரையரங்குகளில் ‘தெறி’ திரைப்படம் வெளியாகவில்லை. குறிப்பாக சென்னையைச் சுற்றியுள்ள புறநகரப் பகுதிகளில் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும், திரைப்படக்குழு விரிவான வெளியீடு ஏற்படாமல் போனாலும், தயாரித்த திட்டமிட்ட தேதியில் படத்தை வெளியிடும் முடிவை மேற்கொண்டது.

இதனால், சென்னை நகரத்திற்குள் உள்ள சில முக்கிய திரையரங்குகளில் மட்டும் படம் திரையிடப்பட்டது. இந்த தடைகளையும் தாண்டி, படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல்நாளே மாஸ் ஓப்பனிங் பதிவானது. படம் வசூலில் மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றதுடன், அட்லீ-விஜய் கூட்டணிக்கு இது முதல் வெற்றித் தொடக்கமாக அமைந்தது.

மெர்சல்: : தளபதி விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் நடித்தும், அட்லீ இயக்கியும், 2017-ம் ஆண்டு வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அரசியல், மருத்துவம், தொழிலாளர் உரிமை, மாநில அடையாளம் உள்ளிட்ட பல பரிமாணங்களில் இந்தப் படம் கடுமையான எதிர்ப்பை சந்தித்தது.

படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா ஆகியவை தொடர்பான வசனங்களுக்கு பாஜகவின் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் தேசிய தலைமை உறுப்பினர் ஹெச். ராஜா உள்ளிட்டோர் படத்தின் சில பகுதிகள் அகற்றப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். ஹெச். ராஜா, விஜய்யின் முழுப் பெயரான “ஜோசப் விஜய்” என ட்விட்டரில் குறிப்பிட்டது புதிய சர்ச்சையை உருவாக்கியது.

அதேபோல், அரசு மருத்துவமனை மருத்துவர்களை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. மக்கள் நம்பிக்கையை குலைக்கும் வகையில் அரசு மருத்துவசேவை காட்டப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. படத்தில் பணியாற்றிய மெஜிஷியன் ரமணன் ஷர்மா, தமக்கு சம்பளப் பாக்கி வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்தார். இது தொழிலாளர் உரிமை சார்ந்த மேலும் ஒரு சிக்கலாக உருவெடுத்தது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரம் பகுதியில் விஜய்க்கான பெரிய கட் அவுட் வைக்கப்பட்டதை தொடர்ந்து கன்னட அமைப்புகள் சில, திரையரங்கு மீது கல்லெறிந்து வன்முறையில் ஈடுபட்டன. பின்னர் ‘மெர்சல்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக்கூடாது என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

படம் வெளியாகும் 24 மணி நேரத்துக்கு முன்னர் வரை சென்சார் சான்றிதழ் வழங்கப்படாமல் தாமதமடைந்ததும், தயாரிப்பு குழுவுக்கு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே, ரசிகர்களிடம் படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. வசூலில் சாதனை படைத்து, விஜய்க்கு மேலும் அரசியல் சாயலுள்ள நடிகர் என்ற ஒரு புதிய முகாமையும் உருவாக்கியது.

சர்க்கார்: தளபதி விஜய் மற்றும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில், 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான ‘சர்கார்’ திரைப்படம், அதே வருடம் தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய படமாகும். திரைக்கதையிலிருந்தும், அரசியல் வசனங்களிலிருந்தும் தொடங்கி, நடிகரின் மேடைத்தெரிவுகள்வரை இந்தப் படம் பல பரிமாணங்களில் எதிர்ப்பு கிளம்பிய திரைப்படமாக திகழ்ந்தது.

படத்தின் கதை தன்னுடையதின் தழுவல் என எழுத்தாளர் வருண் ராஜேந்திரன் வழக்குத் தொடர்ந்தார். வழக்கின் தொடர்ச்சியில், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், வருண் ராஜேந்திரனுக்கு கிரெடிட்ஸ் வழங்குவதாக நீதிமன்றத்தில் உறுதியளித்ததை அடுத்து, இந்தத் தகவல் விவகாரம் முடிவுக்கு வந்தது. முக்கிய சர்ச்சை அரசியல் பக்கம் இருந்தது. படத்தில் அரசு வழங்கும் இலவசங்களை விமர்சிக்கும் வசனங்கள், மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்த காணொளி குறிப்பு போன்றவைகள் அதிமுகவினர் கோபத்தை ஏற்படுத்தின.

இது குறித்து அதிமுக நிர்வாகிகள், திரையரங்குகள் முன்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். சில இடங்களில் ‘சர்கார்’ போஸ்டர்கள் கிழிக்கபட்டனும், போராட்டக்குழுக்கள் திரையரங்கு உரிமையாளர்களை அழுத்தியதனாலும், சில திரையரங்குகள் படம் திரையிட எச்சரிக்கையாக இருந்தன. மேலும், பட வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேசிய அரசியல் சாயலான கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டன.

“நீங்களே ஒரு சர்கார்” போன்ற வாசகங்கள், விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற புதிய ஊகங்களுக்கு வழிவகுத்தன. இந்த சர்ச்சைகள் அனைத்தையும் தாண்டி, ‘சர்கார்’ திரைப்படம் வசூலில் பெரிய வெற்றியைப் பெற்றது. விமர்சனங்களை மீறியும், ரசிகர்கள் ஆதரவில் நெறித்தடம் மாறாத திரைப்படமாக அமைந்தது.

பிகில்: தளபதி விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில், 2019-ம் ஆண்டு வெளியான பிகில்’ திரைப்படம் விளையாட்டு பின்னணியுடன் வந்ததாலும், பெண்கள் சாகசங்களை மையமாகக் கொண்டதாலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இருந்தாலும், படம் வெளியாகும் முன்பே சில முக்கிய சர்ச்சைகளை சந்தித்தது.

படத்தின் போஸ்டரில், விஜய் இறைச்சி வெட்டும் மரக்கட்டையின் மீது கால்வைத்திருப்பது போன்ற காட்சி இடம்பெற்றது. இதனை சென்னை வணிகர் சங்க உறுப்பினர்கள் கண்டித்தனர். இது இறைச்சி வியாபாரிகளை அவமதிக்கும் வகையில் உள்ளது என்றும் கூறி, போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து படக்குழு, குறித்த போஸ்டரை பிற்படுத்தியது.

மேலும், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், தளபதி விஜய் பேசிய “எவனை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ, அவனை அங்கே கரெக்டா உட்கார வைத்தீர்கள் எனில், இந்த கோல்டு மெடல் தானாக வந்து சேரும்” என்ற வரிகள், அரசியல் சாயலில் கூறப்பட்டதாக பாஜக மற்றும் அதிமுகவினர் கடும் விமர்சனம் தெரிவித்தனர்.

அந்த பேச்சு, அரசியல் நடவடிக்கைகள், அதிகாரமாற்றம் உள்ளிட்ட உணர்வுகளை மையமாகக் கொண்டு இருக்கலாம் என ஊகிக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் இது பெரிதும் பரவியதோடு, விஜய் அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கக் கூடும் என்ற பலரது கருத்துகளுக்கும் இடமளித்தது. இந்த சர்ச்சைகள் இருந்தும், ‘பிகில்’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது. பெண்கள் விளையாட்டு களத்தை மையமாகக் கொண்ட திரைப்படமாக இது புதிய முயற்சியாகும் என்ற விமர்சனங்களும் வந்தன.

மாஸ்டர்: தளபதி விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய படம். ஆனால் இப்படம் தயாரிக்கப்படும் கட்டத்திலிருந்தே வெளியீட்டுக்குப்பின் வரையிலும் பல்வேறு சர்ச்சைகள், எதிர்ப்புகள், அரசியல் விமர்சனங்கள் எழுந்தன.

நெய்வேலியில் படம் எடுத்துக் கொண்டிருந்த வேளையில், தளபதி விஜய்யின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. படப்பிடிப்பு தளத்திற்கே வந்த அதிகாரிகள், விஜய்யிடம் நேரில் விசாரணை நடத்தி, பின்னர் அவரை அவர்களது வாகனத்தில் சென்னைக்கு அழைத்துச் சென்றது, தமிழக திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் இந்த நடவடிக்கையை அரசியல் நோக்குடையது எனக் கண்டித்தனர்.

மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பிய விஜய், தனது வாகனத்தின் மீது ஏறி, ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் மீடியா மற்றும் ரசிகர்கள் வட்டத்தில் பல்வேறு விமர்சனங்களும், பாராட்டுகளும் குவிந்தன. ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் கதை தன்னைச் சேர்ந்ததாக எழுத்தாளர் கே. ரங்கதாஸ் புகார் அளித்தார். இந்த விவகாரம் சில நாட்கள் மீடியாவில் விவாதமாக இருந்தது. அனைத்து தடைகளையும் தாண்டி, ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியானவுடன், பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை செய்தது.

பீஸ்ட்: தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ‘பீஸ்ட்’ திரைப்படம், 2022-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13-ம் தேதி திரைக்கு வந்தது. படம் வெளியாகும் காலப்பகுதியில், அது சந்தித்த சர்ச்சைகள் மற்றும் வெளியீட்டு விவகாரங்கள் பெரும் கவனத்தை பெற்றன.

முதலில், இப்படம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகவிருந்த நிலையில், அதே தேதியில் யஷ் நடிப்பில் வெளியான ‘கே.ஜி.எஃப். 2’ பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவிருந்தது. இதனால் போட்டியைத் தவிர்க்க, ‘பீஸ்ட்’ படம் ஒருநாள் முன்னதாக ஏப்ரல் 13-ம் தேதி வெளியிடப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் ‘பீஸ்ட்’ படத்தை தமிழ்நாட்டில் வெளியீட்டுக் கொண்டதாலும், அதே நிறுவனம் ‘கே.ஜி.எஃப். 2’ திரைப்படத்தின் சில வெளியீட்டு பகுதிகளையும் கைப்பற்றியிருந்ததாலும், விற்பனையின் போது முன்வைத்த திரையரங்குகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது என விஜய் ரசிகர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், படத்தின் கதைக்களத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் எதிரிகள் என காட்டப்பட்டிருப்பது மற்றும் வன்முறைக் காட்சிகள் அதிகம் இருப்பது ஆகிய காரணங்களால், கத்தார் மற்றும் குவைத் உள்ளிட்ட சில மத்திய கிழக்கு நாடுகளில் ‘பீஸ்ட்’ திரைப்படம் தடை செய்யப்பட்டது. இது தமிழ்சினிமாவிற்கு சர்வதேச அளவில் எதிர்வினையை ஏற்படுத்தியது.

இதோடு மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் லீக் எனும் சிறுபான்மை கட்சி, படத்தில் முஸ்லிம்கள் குறித்து தவறான உருவாக்கம் கொடுக்கப்பட்டுள்ளது என கூறி, தமிழ்நாட்டிலேயே படத்தை தடைசெய்யக்கோரி அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை வைக்கப்பட்டது.

பல எதிர்மறை விமர்சனங்கள் மற்றும் சிக்கல்களுக்கிடையில், படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்தன. இருப்பினும், ரசிகர்கள் மத்தியில் விஜயின் நடிப்பு மற்றும் ஹீரோயிசம் பாராட்டை பெற்றதாகக் கூறப்படுகிறது.

தி கோட்: கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் காட்சிகள் AI தொழில்நுட்பத்தின் வாயிலாக சேர்க்கப்பட்டது. விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், உரிய அனுமதியின்றி விஜயகாந்தின் AI தொழில்நுட்ப காட்சிகளை பயன்படுத்தக்கூடாது என அறிக்கை வெளியிட்டார். இதனை அடுத்து விஜய்யும், படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபுவும் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்த நிலையில் இப்பிரச்னை முடிவுக்கு வந்தது. விஜய் கேரியலில் அதிக வசூல் சாதனை படைத்த படங்களில் இதுவும் ஒன்றாக அமைந்தது.

Read more: “பாபா படத்தால் என் கெரியரே காலி..” நடிகை மனிஷா கொய்ராலா ஓபன் டாக்..

Next Post

ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்த ஈரானும் இஸ்ரேலும் எதிரிகளாக மாறியது எப்படி..? பகீர் கிளப்பும் பின்னணி..

Sun Jun 22 , 2025
ஆங்கிலத்தில் ஒரு பிரபலமான மேற்கோள் உள்ளது ‘நிரந்தர எதிரிகள் இல்லை, நிரந்தர நண்பர்கள் இல்லை, நிரந்தர நலன்கள் மட்டுமே.’ இந்த மேற்கோள் இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் மிகவும் பொருத்தமானது, ஏனென்றால் ஒரு காலத்தில் ஒருவருக்கொருவர் சிறந்த நண்பர்களாக இருந்த இஸ்ரேலும் ஈரானும் இன்று ஒருவருக்கொருவர் சத்தியப்பிரமாண எதிரிகளாக மாறிவிட்டன. மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணைகளை ஒருவருக்கொருவர் ஏவ முயற்சிக்கும் இந்த இரண்டு நாடுகளும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தன. அத்தகைய சூழ்நிலையில், […]
iran israel war 11zon

You May Like