சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சாஸ்தா நகரைச் சேர்ந்த குகன் என்பவர், சிங்கப்பூர் பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கோவையில் பயின்றபோது, தனது ஜூனியர் மாணவியைக் காதலித்துள்ளார். “நீ இல்லையென்றால் செத்துவிடுவேன்” என உணர்ச்சிவசப்பட்டுப் பேசி அந்தப் பெண்ணை நம்ப வைத்துள்ளார். பெண்ணின் பெற்றோரான கண்ணன் – செல்வகுமாரி தம்பதியினர், குகனின் பெற்றோருக்குத் தெரியாமலேயே ஒரு கோவிலில் எளிமையான முறையில் திருமணத்தை நடத்தி வைத்தனர். சாந்தி முகூர்த்தம் உள்ளிட்ட சடங்குகள் முடிந்து, ஒரு வார காலம் சினிமா, ஹோட்டல் என இந்த ஜோடி மகிழ்ச்சியாக ஊர் சுற்றியுள்ளது.
திருமணமான ஏழே நாட்களில், “சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்ல விசா ஏற்பாடு செய்ய வேண்டும், அதற்குச் சிவகங்கை போகிறேன்” என்று கூறிப் புறப்பட்டார் குகன். ஆனால், சொன்னபடி அவர் திரும்பவில்லை. போனில் “இதோ வருகிறேன், பஸ் ஏறிவிட்டேன்” என தொடர்ந்து மழுப்பலாகப் பதிலளித்து வந்துள்ளார். மணமகள் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மணிக்கணக்கில் காத்திருந்தும் குகன் வரவில்லை. ஒருகட்டத்தில் குகனின் சகோதரி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்தப் பெண்ணுக்கு, அங்கு மேலும் அதிர்ச்சிகள் காத்திருந்தன.
தனது பாஸ்போர்ட் வேலைகளைக் கவனிப்பதாகக் கூறித் தட்டிக்கழித்த குகனின் செல்போனை அந்தப் பெண் தற்செயலாகப் பார்த்தபோது, இதயமே நொறுங்கும் உண்மை வெளிப்பட்டது. குகன் பல பெண்களுடன் நெருக்கமான மற்றும் ஆபாசமான உரையாடல்களில் ஈடுபட்டிருந்தது அம்பலமானது. பல பெண்களைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியதும் தெரியவந்தது. தன்னைப் போல் வேறு எந்தப் பெண்ணும் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில், அந்த இளம்பெண் தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காதல் என்ற போர்வையில் பெண்களை ஏமாற்றி, திருமணத்திற்குப் பின் தலைமறைவாகும் இத்தகைய நபர்கள் குறித்துப் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என காவல்துறையினர் எச்சரிக்கின்றனர்.
Read More : பெரும் சோகம்..!! கான்கிரீட் தடுப்புச் சுவர் மீது பயங்கரமாக மோதிய பேருந்து..!! 15 பயணிகள் உயிரிழப்பு..!!



