நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் நடைபெற்ற கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ், செய்தியாளர்களைச் சந்தித்தபோது கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் கூட்டணி குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். தவெக-வின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் எஸ்.ஐ.ஆர். (SIR) படிவங்களில் விடுபட்ட பெயர்களை சேர்க்கும் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசிக்க நாமக்கல் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கூட்டணி குறித்துப் பேசிய அருண்ராஜ், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் ஒரு மாபெரும் கூட்டணி அமைய உள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும், முடிவுகளை எடுக்கவும் ஒரு தனிக் குழு அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தலைவர் விஜய் விரைவில் வெளியிடுவார். எங்களை பொறுத்தவரை, தலைவர் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு வரும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும்.
திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளை தவிர்த்து, விஜய்யின் தலைமையையும், கொள்கைகளையும் ஏற்று யார் கூட்டணிக்கு வந்தாலும் அவர்களை அரவணைத்துச் செல்லத் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். மேலும், சேலத்தில் நடைபெறவிருந்த மக்கள் சந்திப்புக் கூட்டம் சில நிபந்தனைகள் காரணமாக தள்ளிப்போனது குறித்து விளக்கம் அளித்த அவர், தலைவர் விஜய் மக்களை சந்திப்பதற்கான அதிகாரப்பூர்வ தேதி விரைவில் கட்சித் தலைமையால் அறிவிக்கப்படும் என்றார். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தவெக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்பது உறுதி என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.



