மதிய உணவுக்குப் பிறகு ஏற்படும் அந்தச் சிறு மயக்கமும், அதைத் தொடர்ந்து நாம் போடும் குட்டித் தூக்கமும் வெறும் சோம்பேறித்தனம் அல்ல; அது நம் மூளையை ‘ரீசார்ஜ்’ செய்யும் ஒரு அற்புதமான அறிவியல் செயல்முறை என்பது தற்போது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, இரவு நேரத்தில் ஆழ்ந்து உறங்கினால் மட்டுமே மூளை புத்துணர்ச்சி பெறும் என்று கருதப்பட்ட நிலையில், மதிய நேரக் குட்டித் தூக்கமும் அதே அளவிலான நன்மைகளைத் தருகிறது என ஜெர்மனியின் ஃப்ரெய்பெர்க் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நமது மூளை நாள் முழுவதும் எண்ணற்ற தகவல்களைச் சேமித்துக்கொண்டே இருப்பதால், நரம்பு செல்கள் (Neurons) சோர்வடையத் தொடங்குகின்றன. இந்தச் சோர்வு அதிகரிக்கும்போது புதிய விஷயங்களைக் கற்கும் திறன் குறைகிறது. இதனைச் சரிசெய்ய ‘சினாப்டிக் ரீசெட்’ (Synaptic Reset) என்ற செயல்முறை அவசியம் என்று ஆய்வாளர் டாக்டர் கிரிஸ்டோஃப் குறிப்பிடுகிறார். நாம் மதியம் ஒரு 45 நிமிடங்கள் வரை உறங்கும்போது, மூளையில் உள்ள நியூரான்களுக்கு இடையேயான இணைப்புகள் சமநிலைப்படுத்தப்படுகின்றன. இது மூளையில் தேவையற்ற குப்பைகளை நீக்கி, புதிய நினைவுகளையும் தகவல்களையும் சேமிக்கத் தேவையான இடவசதியை உருவாக்கித் தருகிறது.
இந்த ஆய்விற்காக 20 ஆரோக்கியமான நபர்களை கொண்டு நடத்தப்பட்ட சோதனையில், மதியம் தூங்கி எழுந்தவர்களின் கற்றல் திறன் மற்றும் நினைவாற்றல், தூங்காமல் விழித்திருந்தவர்களை விட மிகச் சிறப்பாக இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், மதியத் தூக்கத்திலும் சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மதிய உணவைச் சாப்பிட்ட உடனே படுக்கைக்குச் செல்வது செரிமானக் கோளாறுகளை உண்டாக்கும். எனவே, சாப்பிட்டு முடித்ததும் சிறிது தூரம் மெதுவாக நடந்துவிட்டு, பின்னர் ஒரு குறுகிய நேர தூக்கத்தை மேற்கொள்வதே ஆரோக்கியமானது. இது மூளையைச் சுறுசுறுப்பாக்கி, அன்றைய நாளின் அடுத்தடுத்த பணிகளைத் தொய்வின்றிச் செய்யப் பெரும் உதவியாக இருக்கும்.



