தமிழ்நாட்டில் பகலில் மண்டையைப் பிளக்கும் வெயிலும், நள்ளிரவு முதல் அதிகாலை வரை கடும் பனியும் மக்களை வாட்டி வதைக்கின்றன. இத்தகைய சூழலில், சென்னை வானிலை ஆய்வு மையம் மழை மற்றும் புதிய வளிமண்டல மாற்றங்கள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு புதிய ‘காற்றழுத்த தாழ்வு பகுதி’ உருவாக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை எப்போது பெய்யும்..?
இதன் காரணமாக வரும் பிப்ரவரி 19-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வைப் பொறுத்து, பிப்ரவரி 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்த மழை, கோடை காலத்திற்கு முன்பே அதிகரித்து வரும் வெப்பத்தை ஓரளவிற்கு தணிக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மழை ஒருபுறம் இருக்க, வட தமிழக மாவட்டங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும். இதனால் சாலைகளில் பார்வை திறன் (Visibility) குறைய வாய்ப்புள்ளதால், அதிகாலை நேரங்களில் வாகனங்களை ஓட்டுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடல் கொந்தளிப்பாக இருக்க வாய்ப்புள்ளதால், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 19-ம் தேதி மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென்தமிழகக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, அந்த குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More : “பெண்டாட்டி வந்த நேரம்”..!! எந்த ராசியினருக்கு திருமணத்திற்குப் பின் தொட்டதெல்லாம் பொன்னாகும்..?



