வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால், கோடை வெப்பம் தணிந்து மக்கள் குளிர்ச்சியான சூழலை அனுபவிக்கின்றனர். நேற்றும், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 35 செமீ, மேல்பவானியில் 30 செமீ கனமழை பெய்தது.
தற்போது, தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவி வருகிறது. அந்த வகையில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (மே 27) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்றும் (மே 27), நாளையும் (மே 28) கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், வரும் 29, 30ஆம் தேதிகளில் கோவை மற்றும் நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் அன்றைய தினங்களில் திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.