தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சாலைப் பகுதியில் அமைந்துள்ள சத்யா நகர் உப்பளம் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதாக தென்பாகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார், அங்கு ஒரு இளைஞர் பீர் பாட்டிலால் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். திருச்செந்தூர் டவுண் டி.எஸ்.பி மதன் நேரில் விசாரணை நடத்திய நிலையில், உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலையுண்டவர் அதே பகுதியைச் சேர்ந்த சீனு (26) என்பதும், அவர் மீது ஒரு கொலை வழக்கு உட்பட சுமார் 16-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. ஊரில் நிலவி வந்த உயிருக்கு அச்சுறுத்தல் காரணமாக வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்த சீனு, கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக நேற்று (டிசம்பர் 25) தனது சொந்த ஊரான சத்யா நகருக்குத் திரும்பியுள்ளார். பண்டிகை காலத்தைக் கொண்டாடுவதற்காகத் தனது நண்பர்களுடன் சேர்ந்து உப்பளம் பகுதியில் மது அருந்தியபோது, அவர்களுக்குள் திடீரென மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது.
மது போதையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாற, ஆத்திரமடைந்த நண்பர்களே பீர் பாட்டிலால் சீனுவின் முகத்தில் சரமாரியாகக் குத்தி அவரைத் துடிதுடிக்க கொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர். முன்விரோதம் காரணமாக இந்தத் திட்டம் அரங்கேற்றப்பட்டதா அல்லது போதையில் ஏற்பட்ட தற்காலிக மோதலா என்ற கோணத்தில் தென்பாகம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : தமிழக அரசியலில் பரபரப்பு..!! கைதாகிறார் அமைச்சர் சிவசங்கர்..? திமுக தலைமை அதிர்ச்சி..!!



