தமிழ்நாட்டின் ஆன்மீக பொக்கிஷங்களில் ஒன்றான கொங்கு மண்டலம், பல அறியப்படாத வரலாற்று ரகசியங்களை தன்னுள் கொண்டுள்ளது. அந்த வகையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ள சிங்காநல்லூர் எனும் சிறிய கிராமத்தில், பாலாற்றங்கரையில் எழிலுடன் வீற்றிருக்கிறார் அருள்மிகு சித்தாண்டீஸ்வரர்.
இக்கோவில் வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல, சுமார் 800 ஆண்டுகால சோழர் காலத்து வரலாற்று சான்றுகளை தாங்கி நிற்கும் ஒரு கலை கூடமாகும். இரவு நேரங்களில் இன்றும் சித்தர்கள் சூட்சும வடிவில் வந்து இங்குள்ள சிவபெருமானை வழிபாடு செய்வதாக இப்பகுதி மக்களிடையே ஒரு தீராத நம்பிக்கை நிலவுகிறது.
இக்கோவிலின் தொன்மையை அங்குள்ள கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன. கி.பி 1274-ஆம் ஆண்டில் கொங்கு சோழ மன்னனான வீரராஜேந்திர சோழன் இந்த பகுதியை ஆட்சி செய்தபோது, ஒரு காணி நிலத்தை இக்கோவிலுக்கு தானமாக வழங்கிய செய்தி கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது. இதை கொண்டு இக்கோவில் 13-ஆம் நூற்றாண்டிற்கு முந்தையது என்பது உறுதியாகிறது.
இக்கோவிலின் மிக முக்கியமான சிறப்பம்சம் இங்குள்ள ‘மகா லிங்கம்’ ஆகும். இந்தியாவிலேயே 7 இடங்களில் மட்டுமே காணப்படக்கூடிய அபூர்வமான 16 பட்டை (பதினாறு முகம்) கொண்ட லிங்கம் இங்கு அமையப்பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் இத்தகைய லிங்கம் உள்ள இரண்டு இடங்களில் சிங்காநல்லூர் சித்தாண்டீஸ்வரர் கோவிலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்மீக ரீதியாக, மேற்கு நோக்கி அமையப்பெற்ற சிவன் கோவில்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. அந்த வகையில், இந்தச் சித்தாண்டீஸ்வரர் கோவிலும் மேற்கு நோக்கியே அமைந்துள்ளது கூடுதல் சிறப்பாகும். இக்கோவிலின் நடை தினமும் காலை 10.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். பாலாற்றின் அமைதியும், பழங்காலக் கட்டிடக்கலையும் இணைந்து பக்தர்களுக்கு ஒரு மனநிறைவான தரிசனத்தை வழங்குகின்றன.
இக்கோவிலுக்கு செல்ல விரும்பும் பக்தர்கள் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் 10A அல்லது 29 ஆகிய பேருந்துகளை பயன்படுத்தலாம். பொள்ளாச்சியில் இருந்து காலை 6.15 மற்றும் மதியம் 12.15 மணிக்கும், கோட்டூரில் இருந்து காலை 9:30 மற்றும் மதியம் 2.30 மணிக்கும் இந்தப் பேருந்து சேவைகள் கிடைக்கின்றன. வரலாற்று ஆய்வாளர்களும், ஆன்மீகத் தேடலில் உள்ளவர்களும் தங்களது பயணப் பட்டியலில் இடம்பெற செய்ய வேண்டிய ஒரு முக்கியமான இடமாக சிங்காநல்லூர் சித்தாண்டீஸ்வரர் கோவில் திகழ்கிறது.
Read More : மகாலட்சுமி ராஜயோம் : இந்த 4 ராசிக்காரர்கள் தொட்டது எல்லாம் பொன்னாக மாறும்..!



