“நான் என்ன தவறு செய்தேன்?” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ்”தவறு செய்தது அன்புமணி அல்ல 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கி நான்தான் தவறு செய்து விட்டேன்” என பதில் கூறியுள்ளார். மேலும் அன்புமணியை பற்றி பேசும்போது கண்கலங்கினார் பாமக நிறுவனர் ராமதாஸ். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ், இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எங்கள் கட்சியை பற்றிய செய்திகளை பலமுறை கேள்வி கேட்டுள்ளீர்கள் நானும் பதில் அளித்துள்ளேன். தர்மபுரியில் ஒரு கூட்டத்தில் அன்புமணி பேசியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நானும் பார்த்தேன். நான் என்ன குற்றம் செய்தேன்? ஏன் பதவி நீக்கம்? என்றும் அன்புமணி பேசி இருந்தார். இது முழுக்க முழுக்க மக்களையும், கட்சிக்காரர்களையும் திசை திருப்பும் முயற்சியாகும். அன்புமணியை அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன், தவறு செய்தது அன்புமணி அல்ல 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கி நான்தான் தவறு செய்து விட்டேன்.
இனிப்பை தவிர்த்து கசப்பான மாத்திரைகளை கொண்ட மருந்தை கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு நடத்திய கட்சியில் கலகத்தை அன்புமணி ஏற்படுத்தினார். புதுச்சேரியில் நடந்த பொதுக்குழுவில் மேடை நாகரீகம் இல்லாமல் செயல்பட்டது யார்? மைக்கை தூக்கி தலையில் போடுவதை போல அன்புமணி செயல்பட்டார். அம்புமணி தலைமை பண்பு இல்லாதவர்.
வளர்த்த கடா என் மார்பில் எட்டி உதைத்தது. கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து பல தவறுகளை அன்புமணி செய்துள்ளார். அழகான ஆளுயர கண்ணாடியான கட்சியை ஒரு நொடியில் உடைத்தது யார்? ஏதோ போகிற போக்கில் இதை நான் சொல்லவில்லை. ஆதாரங்களுடன் தான் சொல்கிறேன்.
அன்புமணி செய்த தவறுகளை மறைத்து மக்களிடமும், கட்சிக்காரர்களிடம் அனுதாபம் பெற முயற்சி செய்துள்ளார். அதற்கு உண்டான விளக்கம் அளிப்பது என் கடமையாகும். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று நான் சொன்னேன். அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம், பாஜகவுடன் தான் கூட்டணி என்று கூறி அமைத்தவர் அன்புமணி” என்று பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.