தருமபுரி மாவட்டம் அரூர் அருகே எஸ்.அம்மாபாளையம் முள்ளிகாடு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகள் பிளஸ்2 பொதுத்தேர்வை முடித்துவிட்டு தனது சொந்த கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்காக வந்துள்ளார். திருவிழா நடைபெறும் பொழுதே இவர் காணாமல் போனதாகவும், தனது மகளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என மாணவியின் பெற்றோர் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினரும் எங்கு தேடியும் மாணவி குறித்த தகவல்களை சேகரிக்க முடியவில்லை. தன்னுடைய மகள் உயிரோடுதான் யாருடைய பாதுகாப்பிலோ உள்ளார் என எண்ணியிருந்த இவருடைய தந்தை பெருமாளுக்கு பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒருவர், எஸ் அம்மாபாளையம் அருகே உள்ள மலைப்பகுதியில் ஒரு சடலம் தூக்கில் தொங்கப்பட்டு இருந்ததாகவும், ஆனால் உடல்கள் தசைப்பகுதிகள் எதுவும் இல்லாமல் ஒருசில எலும்புக்கூடுகள் மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தனது மகளாக இருக்குமோ என எண்ணி இவருடைய தந்தை மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது தனது மகள் தான் என்று உறுதி செய்தனர். இது தொடர்பாக கோட்டப்பட்டி காவல் துறையினுக்கு தகவல் அளித்ததன் பேரில், சோதனை செய்து மருத்துவ குழுவினரை வரவழைக்கப்பட்டு அங்கு இருந்த பெண்ணின் எலும்பு கூடுகள், அவர் பயன்படுத்திய வாட்ச் உள்ளிட்டவர்களை சேகரித்து டிஎன்ஏ பரிசோதனை மற்றும் உடற்கூராய்வுக்காக எடுத்துச் சென்றனர். மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் இது தற்கொலை அல்ல இந்த கொலை தான் என்றும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த, 9 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன மாணவியின் உடல், எலும்பு கூடுகளாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.