நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இம்ரான் கான் (34). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் சஜிதா பேகம் (25) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த சூழலில் இம்ரான்கானுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், கடந்த சில நாட்களாக தாய் வீட்டில் மனைவி சஜிதா பேகம் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மனைவி வீட்டுக்கு சென்ற இம்ரான்கான் மனைவியுடன் பேசி ஒற்றுமையாக இருக்கலாம் எனக்கூறி அவரை வெளியே அழைத்து வந்துள்ளார்.
பின்னர் இம்ரான்கான் தனது இருசக்கர வாகனத்தில் மனைவியை அழைத்துக் கொண்டு டவுண் பகுதியில் இருந்து பேட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ள குளத்தங்கரை முகைதீன் மீரா சாகிபு தர்காவுக்கு வந்துள்ளார். அங்கு இருவரும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி சஜிதா பேகத்தை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து சாதாரணமாக வெளியே வந்து தனது பைக்கில் தப்பிச் சென்றார்.
தர்காவில் அலறல் சத்தம் கேட்டு எதிர் கடையில் இருந்த சிலர் அவரை புகைப்படம் எடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பேட்டை போலீசாருக்கும் அவர்கள் தகவல் தெரிவித்தோடு ரத்த வெள்ளத்தில் இருந்த சஜிதா பேகத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பவும் முயற்சி எடுத்தனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பேட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பைக்கில் தப்பிச் சென்ற கணவன் இம்ரான்கான் நெல்லை டவுண் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். எதற்காக மனைவியை கொலை செய்தார் என்ன காரணம் என்பது குறித்து தீவிர விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.