தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கி உள்ளது.. கடந்த ஆண்டில் என்.டி.ஏ கூட்டணியில் விலகுவதாக ஓபிஎஸ் அறிவித்தார். இதையடுத்து டிடிவி தினகரனும் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகியதுடன் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார்.. ஆனால் தற்போது டிடிவி தினகரனின் அமமுக என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துவிட்டது..
ஓபிஎஸ் தரப்பு, திமுக அல்லது தவெக உடன் இணைந்து தேர்தலை சந்திக்கலாம் என்று கூறப்பட்டது.. ஓபிஎஸ் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.. தேர்தல் தொடர்பாகவும், கூட்டணி தொடர்பாகவும் அவர் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய அவர் செயற்கையாக செய்யப்பட்ட சூழ்ச்சியால் தான் ராமநாதபுரத்தில் தான் தோல்வி அடைந்ததாக கூறினார்.. மேலும் “ தொண்டர்களின் ஆதரவை நிரூபிக்கவே ராமநாதபுரத்தில் போட்டியிட்டேன்.. ஆனால் சூழ்ச்சியால் வீழ்ந்தேன்.. நட்பின் அடையாளமாகவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்..
அதிமுகவை மீட்பதற்கான முயற்சியை சட்டப்போராட்டத்தின் மூலம் தொடர்ந்து வருகிறோம்.. அதிமுக ஒன்றாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.. 2-வது தர்ம யுத்தத்திற்கு மனோஜ் பாண்டியனும் வைத்திலிங்கமுமே காரணம்.. அதிமுக பிரிந்துஇருக்கிறதா? ஒன்றாக இருக்கிறதா? என்பது மக்களுக்கு தெரியும்.. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது தொடர்பாக பாஜக தரப்பில் யாராவது பேசினார்களா? என்பது பரம ரகசியம்..
ஏற்கனவே என்.டி.ஏ கூட்டணியில் எடப்பாடி பழனிசாமியும், டிடிவி தினகரனும் ஒன்றிணைந்து உள்ளனர்.. டிடிவி தினகரன் நினைத்தால் எங்களை ஒன்றிணைக்க முடியும்.. நானும் இணைய வேண்டும் என்றே சொல்கிறேன். எடப்பாடி பழனிசாமியும் சொல்லிவிட்டால் இணைந்துவிடலாம் தானே.. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் தொடங்கப்பட்டதே அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக தான். தேர்தலில் போட்டியிட இந்த கழகம் தொடங்கப்படவில்லை..
தனிக்கட்சி குறித்தோ, தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.. அதிமுக ஒன்றிணைவதற்கு நான் ரெடி.. இதற்கு டிடிவி தினகரன் மற்றும் அவரின் அண்ணன் எடப்பாடி பழனிசாமி ரெடியா என்று கேட்டு சொல்லுங்கள்.. கூட்டணி தொடர்பாக வதந்தி பரப்பப்படுகிறது.. தனிக்கட்சி தொடங்கும் எண்ணமும் இதுவரை இல்லை” என்று தெரிவித்தார்..



