மானுட வாழ்வின் இன்பங்களும் துன்பங்களும் நம் முன்வினைப் பயன்களின் அடிப்படையில் அமைவதாக ஆன்மீகம் கூறுகிறது. “தலைவிதிப்படி தான் எல்லாம் நடக்கும்” என்ற ஆழ்ந்த நம்பிக்கை நமக்கு இருந்தாலும், அந்த விதியையே மாற்றி எழுதும் வல்லமை இறைவனுக்கு உண்டு என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. வாழ்வின் இக்கட்டான சூழலில், தோல்விகள் நம்மைத் துரத்தும் போது, ஒரு மகாசக்தி நம்மை மீட்டெடுக்காதா என ஏங்கும் மனங்களுக்குப் புகலிடமாகத் திகழ்கிறது மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் அமைந்துள்ள புகழ்பெற்ற திரியம்பகேஷ்வரர் திருக்கோவில்.
பாரதத்தின் பன்னிரு ஜோதிர்லிங்க தலங்களில் திரியம்பகேஷ்வரர் ஆலயம் தனிச்சிறப்பு வாய்ந்தது. பொதுவாக லிங்க வடிவில் ஈசனை மட்டுமே தரிசிக்கும் நமக்கு, இங்கே பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளும் ஒரே லிங்கத்தில் மூன்று முகங்களுடன் காட்சி தருவது ஒரு பேரதிசயமாகும். படைத்தல், காத்தல், அழித்தல் என பிரபஞ்சத்தின் மூன்று இயக்க சக்திகளும் ஓரிடத்தில் சங்கமிப்பதால், இத்தலத்து இறைவனை வழிபடும் பக்தர்களின் தலையெழுத்து எவ்வளவு கடினமாக இருந்தாலும், அது சுபமாக மாற்றியமைக்கப்படும் என்பது ஐதீகம்.
இக்கோவிலின் மற்றுமொரு சிறப்பம்சம், கருவறையில் உள்ள மூலவர் லிங்கம் எப்போதும் தண்ணீருக்கு அடியிலேயே காட்சியளிப்பதாகும். அங்கிருந்து ஊற்றெடுக்கும் நீர், மும்மூர்த்திகளின் அளப்பரிய ஆற்றலைக் குறிப்பதாக கருதப்படுகிறது. இக்கோவில் வளாகத்தில் உள்ள ‘குஷவர்த்த குண்ட்’ எனும் புனித தீர்த்தம் கோதாவரி நதியின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. “தென்னகத்து கங்கை” என்று போற்றப்படும் இந்தத் தீர்த்தத்தில் நீராடுவது, ஒருவரைப் பிறப்பு-இறப்பு எனும் தீராத சுழற்சியிலிருந்து விடுவித்து முக்தியை வழங்கும் எனப் புராணங்கள் போற்றுகின்றன.
தோஷங்களால் துவண்டு போயிருப்பவர்களுக்கு இத்தலம் ஒரு சிறந்த பரிகாரத் தலமாகும். குறிப்பாக, நவகிரக பாதிப்புகளால் ஏற்படும் தடைகளை நீக்க இக்கோவிலில் செய்யப்படும் ‘காலசர்ப்ப தோஷ பூஜை’ மிகவும் பிரபலம். அதேபோல், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும், துர்மரணங்களால் ஏற்படும் பாதிப்புகள் விலகவும் செய்யப்படும் ‘நாராயண் நக்பலி பூஜை’ இத்தலத்தின் ஆன்மீக முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. விதியின் பிடியில் சிக்கி தவிப்பவர்கள், மும்மூர்த்திகளின் அருளாசி பெற்று புதுவாழ்வு தொடங்க நாசி திரியம்பகேஷ்வரர் ஆலயம் ஒரு உன்னத வழிகாட்டியாக திகழ்கிறது.
Read More : சைனீஸ் உணவுகளை அம்மனுக்கு நைவேத்யமாக படைக்கும் விசித்திர கோவில்.. இந்தியாவில் எங்க இருக்கு தெரியுமா..?



