அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த செங்கராயன் கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவரது மகள் அனுசியா (வயது 23) சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த, குமரேசன் என்பவருடன் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நேரில் சந்தித்துள்ளனர். பின்னர் இளைஞரின் சொந்த ஊரான மாங்குடி கிராமத்திற்கு சென்ற காதல் ஜோடியை குமரேசனின் பெற்றோர் ஏற்க மறுத்து திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து குமரேசனும் – அனுசுயாவும் திருச்சி தனியார் விடுதியிலேயே சில நாட்கள் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த குமரேசனின் பெற்றோர், அனுசுயாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனே திருச்சி சென்ற அனுசுயாவின் உறவினர்கள், அவரை சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் செல்போனை வாங்கி கொண்டு சகோதரி ஐஸ்வர்யாவின் இல்லத்தில் கடந்த 10 நாட்களாக தங்க வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்து கொண்ட காதலன் வாடகை கார் மூலம் அரியலூர் மாவட்டம் சின்ன பட்டாக்காடு கிராமத்திற்கு தனது நண்பர்களுடன் வந்திருக்கிறார்.
களவாணி திரைப்பட பாணியில் தெருமுனையில் காரை நிறுத்திய குமரேசன் தனது நண்பர்கள் மூவரை அனுப்பி, அனுசுயா தங்கி இருக்கும் வீட்டில் திருமண அழைப்பிதழ் கொடுப்பதுபோல் கையில் மஞ்சள் பை ஒன்றை பிடித்த படியே நடந்து சென்றுள்ளனர். தனது அக்கா மகள் மித்ராவுடன் விளையாடிக் கொண்டிருந்த அனுசியா, காதலனின் நண்பர்களை கண்டதும் காரில் ஏறி தப்பிச் செல்ல முயன்றிருக்கிறார். அனுசியாவின் சகோதரி வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாத சூழலில், இதனைக் கண்ட ஐஸ்வர்யா சத்தம் போட்டு கத்தி, கூச்சல் எழுப்பியுள்ளார்.
அனுசுயா காரில் ஏறி நொடிப் பொழுதில் தப்பிச்செல்வதை தெருவாசி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த களேபரத்தில் அனுசியாவின் அக்கா மகளான மித்ராவின் காதுப்பகுதியில் இளைஞர்கள் எடுத்து வந்த கத்தி பட்டதில் காயம் ஏற்பட்டு இரத்தம் வெளிவந்திருக்கிறது. உடனடியாக குழந்தை மித்ரா தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அரியலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read more: சிலிண்டர் மானியம் வழங்குவதில் திடீர் மாற்றம்.. உஜ்வாலா திட்ட பயனாளிகளே இத கவனிங்க..!!