ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தில் காட்புரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், தனது உயிர் நண்பனின் மனைவியை நண்பனே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரும், குற்றம் சாட்டப்பட்ட சாகர் என்பவரும் நீண்ட கால நண்பர்கள் ஆவர்.
சாகர் அந்தப் பெண்ணை ‘மைத்துனி’ (அண்ணி) என்று முறை வைத்து அழைத்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி, நண்பன் வீட்டில் இல்லாத நேரத்தை பார்த்து அத்துமீறி நுழைந்த சாகர், அந்தப் பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த துரோகத்தை யாரிடமாவது கூறினால், ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொன்றுவிடுவேன் என மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பியுள்ளார்.
இந்த கொடூரத்தால் மனமுடைந்து போன அந்தப் பெண், மிரட்டலுக்கு பயந்து சில நாட்கள் மௌனமாக இருந்துள்ளார். எனினும், அவரது நடவடிக்கையில் மாற்றத்தை கண்ட குடும்பத்தினர் வற்புறுத்தி விசாரித்தபோது, தனக்கு நேர்ந்த துயரத்தை அழுதுகொண்டே விவரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள சாகரை தனிப்படை அமைத்துத் தீவிரமாக தேடி வருகின்றனர்.



