“உண்மையான காதலன் ஒருபோதும் தனது காதலியின் அந்தரங்கப் படங்களை எடுத்து, அவளை மிரட்ட மாட்டான்” என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
வழக்கின் பின்னணி என்ன..?
காதலிப்பதாக கூறி ஒரு பெண்ணுடன் பழகிய நபர், அந்தப் பெண்ணின் நம்பிக்கையை பெற்று நெருக்கமாக இருந்துள்ளார். அந்த தருணங்களை பெண்ணுக்குத் தெரியாமல் ரகசியமாகப் புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர், தனது காம இச்சையைத் தீர்த்துக்கொள்ள அந்தப் படங்களையே ஆயுதமாக மாற்றியுள்ளார். நான் சொல்வதற்குக் கட்டுப்படாவிட்டால் உன் ஆபாசப் படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன்” என்று மிரட்டி, அந்தப் பெண்ணை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மிரட்டல்கள் எல்லை மீறியதால், பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கில் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், கைதுக்கு அஞ்சி அந்த நபர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தை அணுகினார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அந்த நபரின் கோரிக்கையை தள்ளுபடி செய்தார். “பரஸ்பர சம்மதத்துடன் உறவு இருந்திருக்கலாம், ஆனால் அதை ஒரு பெண்ணை மிரட்டுவதற்கான கருவியாக பயன்படுத்துவதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. இது காதலே அல்ல, ஒரு அப்பட்டமான கிரிமினல் குற்றம்” என்று நீதிபதி தெரிவித்தார்.
தலைமறைவாக இருக்கும் இத்தகைய நபர்களுக்கு ஜாமீன் வழங்குவது, சட்டத்தின் மீதான பயத்தை நீக்கிவிடும் என்றும், இது சமூகத்திற்கு தவறான செய்தியை சென்று சேர்க்கும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



