கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே பழங்குடியினப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு வனப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த வள்ளியம்மா (45) என்ற பழங்குடியினப் பெண் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். அவரைத் தேடி பல இடங்களில் அலைந்தும் கண்டுபிடிக்க முடியாததால், குடும்பத்தினர் புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசாரின் விசாரணையில், காணாமல் போன வள்ளியம்மாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பழனி (52) என்பவருக்கும் கள்ளக்காதல் உறவு இருந்தது தெரியவந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வள்ளியம்மா வேறொரு நபருடன் பழகி வந்ததாக பழனி சந்தேகம் அடைந்துள்ளார். இந்த சந்தேகத்தின் காரணமாகவே அவர் வள்ளியம்மாவை கொலை செய்ய திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் நடந்த அன்று, வனப்பகுதியில் விறகு சேகரிப்பதற்காகச் சென்றபோது, ஆத்திரமடைந்த பழனி கோடரியால் வள்ளியம்மாவின் தலையில் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்த நிலையில், உடலை வனப்பகுதியிலேயே குழி தோண்டி புதைத்துள்ளார். இதையடுத்து, கொலையை உறுதி செய்த போலீசார், வனத்துறையினர் உதவியுடன் உடலை மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், தலையில் ஏற்பட்ட பலத்த காயமே வள்ளியம்மாவின் மரணத்திற்குக் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது. பழனி தனது கொலைக்கான காரணத்தை போலீசாரிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் ஜிகினி காவல் அதிகாரிகள் வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Read More : நீங்கள் மின்னல் தாக்கும் இடத்தில் இருக்கீங்களா..? உங்கள் உயிரை பாதுகாப்பது எப்படி..?



