திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த நொச்சியம் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகள் சினேகா (22). இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பழமுதிர் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே கடையில் பணிபுரிந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் காதர் அலி (22) சினேகாவை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், காதர் அலி சினேகாவிடம் ஆசைவார்த்தை கூறி பலமுறை உடலுறவு வைத்துக் கொண்டுள்ளார். இதில் கர்ப்பமான சினேகா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். இதனால் காதர் அலி சினேகாவிடம் தெரிவிக்காமல் அசாம் மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு தப்பிச் சென்றுள்ளார்.
இதனால், மனமுடைந்த சினேகா மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்தில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக காதர் அலி ஏமாற்றி கர்ப்பமாக்கி விட்டார் என புகார் அளித்துள்ளார். அதன்பேரில், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் அருண்குமார் தலைமையில் தனிப்படையினர் அலியை தேடி வந்தனர். இந்நிலையில், ஓராண்டுக்கு பின் அவர் சொந்த கிராமத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மண்ணச்சநல்லூர் போலீசார், அசாம் மாநிலத்திற்கு சென்று காதர் அலியை கைது செய்து மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.