உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், 3 ஆண்டுகளுக்கு முன்னர் கூட்டுப் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை, அந்த வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞரே சமாதான பேச்சுக்கு அழைத்து, மது கொடுத்து மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு, 24 வயது இளம் பெண் ஒருவர் எத்மத்பூர் பகுதியில் 3 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு ஆக்ரா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், குற்றவாளிகள் தரப்பில் 40 வயதான ஜிதேந்திர சிங் தியாகரே என்ற வழக்கறிஞர் ஆஜராகி வந்தார்.
வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே, வழக்கறிஞர் ஜிதேந்திர சிங் தியாகரே நேரடியாக பாதிக்கப்பட்ட பெண்ணைத் தொடர்பு கொண்டார். இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே பேசி, சமாதானம் செய்து கொள்ளலாம் எனக் கூறி அந்தப் பெண்ணை அழைத்துள்ளார்.
இதையடுத்து, வழக்கறிஞரின் பேச்சை நம்பிய அந்தப் பெண், அவருடன் காரில் புறப்பட்டார். வழக்கறிஞர் அந்தப் பெண்ணை முதலில் குபேர்பூருக்கு அழைத்துச் சென்றார். அங்கே, ஏற்கனவே கூட்டுப் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரிடம் வழக்கறிஞர் பணம் கேட்டுப் பேசியுள்ளார். ஆனால், பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இரவு நேரமானதால், காலையில் மீண்டும் பேசலாம் எனக் கூறி, அந்தப் பெண்ணை ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் வழக்கறிஞர் ஜிதேந்திர சிங். இதற்கிடையே, காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோதே, அந்த வழக்கறிஞர் வலுக்கட்டாயமாக அந்த இளம் பெண்ணுக்கு மது அருந்தக் கொடுத்திருக்கிறார்.
அன்றிரவு, மது போதையில் இருந்த அந்தப் பெண் ஹோட்டல் அறையில் இருந்தபோது, வழக்கறிஞர் ஜிதேந்திர சிங் அந்தப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்தக் கொடூரச் சம்பவத்திற்குப் பிறகு, அங்கிருந்து தப்பிச் சென்ற பாதிக்கப்பட்ட இளம் பெண் மறுநாள் காலையே காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கறிஞர் ஜிதேந்திர சிங் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். வழக்கறிஞர் தலைமறைவாக இருந்த நிலையில், அவர் தனது வீட்டிலேயே பதுங்கி இருப்பது போலீசாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்வதற்காகப் போலீசார் அவரது வீட்டுக்கு விரைந்தனர். காவல்துறை வருவதை அறிந்த ஜிதேந்திர சிங், தப்பியோட முயன்று, தனது வீட்டின் மாடியிலிருந்து பக்கத்து வீட்டின் மீது குதித்தார்.
எதிர்பாராத விதமாக, அவர் தடுமாறிக் கீழே விழுந்ததில் அவரது இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக அவரை மடக்கிப் பிடித்த போலீசார், அவரை கைது செய்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் ஆக்ராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



