இந்தியாவில் கடந்த 4 மாதங்களுக்கு பிறகு கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. எக்ஸ்பிபி.1.16 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா பரவி வருவதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். 138 நாட்களுக்கு பிறகு நேற்றைய தினம், தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது. அதன்படி, நேற்று 1,134 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,026 ஆக உயர்ந்தது. கொரோனா காரணமாக நேற்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,30,813ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே இன்புளூயன்சா வைரஸும் ஒருபக்கம் வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 6 மாநில அரசுகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உஷார்படுத்தியது. இந்நிலையில், கேரளாவில் ஒரே நாளில் 210 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். ICU மற்றும் வென்டிலேட்டர் அமைப்புகளை போதிய இருப்பு வைக்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், பரிசோதனைக் கருவிகள் மற்றும் மருந்துகள் இருப்பதை உறுதி செய்யுமாறு கேரள மருத்துவ சேவைகள் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துக்கு உத்தரவிட்ட அவர், பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.