குரூப் 2 தேர்வு குளறுபடிக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”குரூப் 2 பணிக்கான முதன்மை எழுத்து தேர்வு 25-ம் தேதி காலை மற்றும் மாலை நேரங்களில் 20 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. வருகை பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும் விடைத்தாள்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காரணமாக காலை வினாத்தாள்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.
இதனை ஈடுசெய்யும் பொருட்டு தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டு காலையில் தேர்வுகள் நடைபெற்று முடிந்தது. தேர்வர்களுக்கு காலை தேர்வில் ஏற்பட்ட சிரமங்களை கருத்தில் கொண்டு தேர்வர்களின் நியாயமான கோரிக்கைகள் சரியான முறையில் விடைத்தாள் திருத்தும் போது கருத்தில் கொள்ளப்படும்.

தேர்வாணையத்தின் உடனடி அறிவுறுத்தல்களின் படி மாலை தேர்விற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், தரவரிசைக்கு கருதப்படும் தாள் இரண்டு, பொது அறிவு தாள் தேர்வானது எந்தவித இடையூறும் இன்றி அனைத்து தேர்வு மையங்களிலும் சுமூகமாக நடைபெற்று முடிந்தது. மேலும் இந்த தாள் இரண்டில் தேர்வர்கள் பெரும் மதிப்பெண்கள் மட்டுமே தர வரிசைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இந்த வினாத்தாள் மற்றும் விடைத்தாள் தொகுப்பிற்கும், வருகை பதிவேற்றிற்கும் இடையிலான வரிசை வேறுபாடு காலை தேர்வில் தாமதத்திற்கு காரணம் இந்த வேறுபாடு ஏற்படக் காரணமான அனைவரும் மீதும் தேர்வாணையம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.