நடிகை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, பிரபல நடிகை விஜயலட்சுமி 2011ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் திருமணம் செய்வதாக கூறி உடலுறவு வைத்துக் கொண்டு, 7 முறை கர்ப்பத்தை கலைத்தார் கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், சீமான் மீது இந்திய தண்டனைச் சட்டம் 376வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த சூழலில் கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 12 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.
பின்னர், இந்த உத்தரவை எதிர்த்து சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதில், இரு தரப்பும் அமர்ந்து பேசி தீர்வு காண அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. ஆனால், நடிகை தரப்பு சமரசத்திற்கு தயாரில்லை என்று தெரிவித்தது. இதையடுத்து, நீதிமன்றம் இடைக்காலத் தடையை மேலும் 4 வாரங்கள் நீட்டித்தது.
பாலியல் புகார் வழக்கை ரத்து செய்யக் கோரும் சீமானின் மேல்முறையீடு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி கோரிக்கை விடுத்தார்.. இந்த வழக்கு விசாரணையின் போது மன்னிப்பு கேட்க ஒப்புக்கொண்டு விட்டு பொதுவெளியில் தன்னை பற்றி சீமான் அவதூறாக பேசுவதாக நடிகை தரப்பு முறையீடு செய்தது.. அப்போது நீதிபதிகள் “ சீமானும் நடிகையும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டு இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.. இருவரும் குழந்தைகள் அல்ல என்பதை நினைவில் கொண்டு பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.. சீமான் நடிகை இருவரும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்டு வழக்கை முடிக்காவிடில் இருவரையும் நீதிமன்றம் வரவைக்க நேரிடும்..:” என்று எச்சரித்தனர்.
இரு தரப்பும் அனைத்து புகார்களையும் திரும்ப பெற வேண்டும் என்றும், புகார்களை திரும்ப பெற்றதையும் மன்னிக்கப்பட்டதையும் பிரமாண பத்திரங்களாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டனர்.. இரு தரப்பும் இந்த விவகாரம் குறித்து எந்த ஒரு பேட்டியோ அல்லது காணொலியோ வெளியிடக் கூடாது எனவும் குறிப்பாக இந்த வழக்கு குறித்து ஊடகங்களில் இருவரும் பேசக்கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.. மேலும் உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்..
அதே நேரத்தில் விஜயலட்சுமி தரப்பு, சீமான் மீதான அனைத்து புகார்களையும் திரும்ப பெறுவதாகவும், ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் தெரிவித்தது.. அப்போது நீதிபதிகள், ஓரிடத்தில் நீங்கள் மன்னிப்பை எதிர்பார்க்கும் போது நீங்கள் மன்னிப்பு கேட்டு தான் ஆக வேண்டும்.. மன்னிப்பு கேட்க முடியாது என்றால் நீங்கள் மன்னிப்பை எதிர்பார்க்காதீர்கள் என்று தெரிவித்தனர்..
இந்த நிலையில் இந்த வழக்கில் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.. தனது சொல், செயல்களால் நடிகைக்கு ஏற்பட்ட வலி மற்றும் காயத்திற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக சீமான் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். மேலும் நடிகைக்கு எதிராக தான் கூறிய அனைத்து அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளையும் திரும்ப பெறுவதாகவும் சீமான் தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சீமான் மீதான புகாரை திரும்பப் பெறுவதாக நடிகை தரப்பு கூறியதை தொடர்ந்து உச்சநீதிமன்றம் இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
Read More : சிறுமி ஹாசினி கொலை வழக்கு: தஸ்வந்த் தூக்கு தண்டனையை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்..!