கிருஷ்ணகிரி மாவட்ட பாமக இளைஞர் அணி துணை செயலாளராக பதவி வகித்து வந்தவர் R.அசோகன். இவர் தற்போது பாமகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்கூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் முன்னிலையில், R.அசோகன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்து கொண்டனர். அவர்களுக்குச் சால்வை மற்றும் இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதிருப்தியில் பாமக நிர்வாகிகள்
சமீக நாட்களாகவே பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே உச்சக்கட்ட மோதல் நடந்து வருகிறது. அன்புமணி ஆதரவாளர்களான பாமக பொருளாளர் திலகபாமா உட்பட மாவட்ட நிர்வாகிகளைக் கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்கியிருந்தார். ஆனால், ராமதாஸ் நீக்கியது செல்லாது என அன்புமணி அறிவித்தார். தொடர்ந்து, இருவருக்கும் மோதல் போக்கு நிலவிய நிலையில் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்துக்கு அன்புமணி நேரடியாக சென்று சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
ஆனால், இருவருக்கும் இடையே சுமுக நிலையை ஏற்படுத்த கட்சி மூத்த நிர்வாகிகள், குடும்பத்தினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ராமதாஸ்- அன்புமணி இடையே சமாதானம் ஏற்பட்டுள்ளதாகவும், நல்ல செய்தி விரைவில் வரும் என்று பாமக அரசியல் குழுத் தலைவர் தீரன் கூறியுள்ளார். இதற்கிடையே, தந்தை – மகன் இடையே ஏற்பட்டுள்ள சண்டையால் பல நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே, இதை காரணமாக வைத்து அக்கட்சியினரை தங்கள் பக்கம் இழுக்க திமுக உள்ளிட்ட மற்ற கட்சியினர் வேலைபார்த்து வருவதாக கூறப்படுகிறது. அதன் ஒருபகுதியாக தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட பாமக இளைஞர் அணி துணை செயலாளராக இருந்த R.அசோகன் திமுகவில் இணைந்திருக்கிறார். தந்தை – மகன் இடையே இந்த மோதல் போக்கு தொடர்ந்தால், மேலும் பல நிர்வாகிகள் மாற்றுக் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.