அண்ணா, பெரியாரை பின்பற்றும் எங்களுக்கு திமுக பாடமெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.. அதிமுக பரபரப்பு அறிக்கை..

admk 2025

மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பேரறிஞர் அண்ணா ஆகியோர் பற்றி வெளியிடப்பட்ட வீடியோவுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

மதுரையில் நேற்று நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், பெரியார், அண்ணா குறித்த வீடியோ வெளியானது. இதற்கு கண்டனம் தெரிவித்த திமுக அமைச்சர்கள், அதிமுக ஏன் இதுகுறித்து வாய் திறக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் அதிமுகவி ஐடி விங் இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் “ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் திராவிடத்தின் உறைவிடமாகவே திகழும்! பெரியாரையே இழிவுபடுத்திய கருணாநிதியின் திமுக, அஇஅதிமுக-வுக்கு பாடமெடுக்க எந்த அருகதையும் இல்லை! அவலமே உருவான ஒரு ஆட்சியை நடத்தும் ஸ்டாலினின் திமுக, அதைப்பற்றி நாங்கள் நாள்தோறும் தெரிவிக்கும் மக்களின் குரலான விமர்சனங்ககளுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல், “Take Diversion” என்ற தனது வழக்கமான பாணியில், முருக பக்தர்கள் மாநாட்டை வைத்து, அஇஅதிமுக மீது அவதூறான கருத்துகளை அள்ளித் தெளித்து, மக்களின் கவனத்தை திசைதிருப்பிவிடலாம் என எண்ணுகிறது.


திமுகவின் அமைச்சர் அடிபொடிகள் வரிசையாக செய்தியாளர் சந்திப்பு கொடுக்க, அறிவாலய Gatekeeper ஆர்.எஸ்.பாரதி பெயரில் வழக்கம் போலவே அறிக்கை வாந்தியையும் கக்கியுள்ளது திமுக. “திராவிடத்தை அழிக்க முருகா வா” என்று ஒட்டப்பட்ட போஸ்டர்களால் திராவிடம் அழிந்து விடுமா? திராவிடம் என்ற கொள்கையைத் தான் யாராவது அழித்துவிட முடியுமா? திராவிடம் என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலான, ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாட்டை செலுத்திக் கொண்டிருக்கும் உயரிய கொள்கை நெறி! மக்களுக்கான ஒரு கொள்கையை யாரால் வீழ்த்த முடியும்?

திமுக-வின் இந்த விஷமப் பிரச்சாரம், நம் திராவிடக் கொள்கையையே Insecure-ஆக காட்டக் கூடிய ஒரு மோசமான Narrative. இதை செய்வதற்கு திமுக வெட்கித் தலைகுனிய வேண்டும். அரசியல் செய்கிறோம் என்ற பெயரில் திராவிடத்தை வலுவற்ற கொள்கை போல கட்டமைக்க முயலும் திமுக-வின் சதிச்செயல் கடும் கண்டனத்திற்குரியது.

பெரியார், அண்ணாவின் வாழ்வியல் உரத்தில் தழைத்தோங்கி நிற்கும் கொள்கையை, ஒரு மாநாடு சிதைத்து விடுமா என்ன? இல்லை, அப்படி நடக்க தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விட்டுவிடுமா? திராவிடக் கொள்கை எங்கள் குருதியில் கலந்த ஒன்று. “ஒன்றே குலம்; ஒருவனே தேவன்” என்ற பேரறிஞர் அண்ணாவின் நெறிப்படி வாழ்பவர்கள் நாங்கள். ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கடவுள் நம்பிக்கைக்கும் மதிப்பளிக்கக் கூடிய இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதால் தான், கடவுள் பக்தியை பறைசாற்ற, அமைப்பு ரீதியாக நடத்தப்பட்ட மாநாட்டிற்கு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்கள் ஜனநாயக ரீதியாக வாழ்த்து தெரிவித்தார்கள்.

எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், தனிப்பட்ட முறையில் முருக பக்தர்கள் என்ற அடிப்படையிலேயே அந்த மாநாட்டில் கலந்துகொண்டனரே தவிர எந்தவித அரசியல் நோக்கத்திலும் அல்ல. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ, உறுதிமொழிகளையோ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த யாரும் ஏற்கவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்.

அதே போல், அந்த மாநாட்டில், தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பற்றி வெளியிடப்பட்ட வீடியோ என்பது துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். உண்மையில் அப்படிப்பட்ட வீடியோ வெளியிட்டதாக எங்கள் கவனத்திற்கு வரவோ, நாங்கள் யாரும் பார்க்கவோ இல்லை. மாநாடு முடித்து வந்த பிறகே இதுபற்றிய செய்திகள் வாயிலாக தான் நாங்களும் அறிந்து கொண்டோம்.

ஜாதியின் பெயரால் மக்கள் பிரிவுண்டு இருக்க, அந்த ஜாதிக்கு மூலமாக கடவுளை வைத்து சிலர் அரசியல் செய்ய, அந்த அரசியலை எதிர்க்கவே “கடவுள் மறுப்பு” கொள்கையை ஆயுதமாக ஏந்தினார் தந்தைப் பெரியார். பெரியாரின் கோபம் எப்போதும் கடவுள் மீது அல்ல; மாறாக, கடவுளின் பெயரைச் சொல்லி சிலரின் தவறான அரசியலால் ஏற்பட்ட கொடும் ஜாதிய பேதங்கள் மீது தான்! “நான் பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன்; பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன்” என அரசையும் மதத்தையும் தெளிவாக வேறுபடுத்தி, Secularist அரசியலை முன்னெடுத்தவர், நாங்கள் பெயரில் மட்டுமல்ல, எங்கள் நெஞ்சங்களிலும் தாங்கும் இதயதெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கைப் பார்வையைத் தன்னகத்தே கொண்டு, வழுவாமல் இயங்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, அவதூறும் ஆபாசமும் மட்டுமே கொள்கையாகக் கொண்ட திமுக பாடமெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

அதேபோல், கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி அவர்கள், தனது தொகுதிக்கு உட்பட்ட மிகவும் பழமைவாய்ந்த, மதிப்பிற்குரிய பேரூர் ஆதீனத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி அளிக்கப்பட்ட அழைப்பினை ஏற்று கலந்துகொண்டதாகவும், ஆர்.எஸ்.எஸ் விழாவில் கலந்துகொள்ளவில்லை எனவும் செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்திவிட்டார்.

பாரதிய ஜனதா கட்சியை மையமாகக் கொண்டு இன்று இவ்வளவு பேசும் திமுக, 1999-2004 வரை என்ன செய்து கொண்டிருந்தது? கோமாவில் இருந்த முரசொலி மாறனின் மத்திய அமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொள்ள பாஜக-வின் காலடிகளைத் தேடி சென்ற கொத்தடிமைகளான திமுகவிற்கு அப்போது மட்டும் இனித்ததா?

எந்த கட்சியை எதிர்த்து தங்கள் கட்சி அரசியலுக்கு வந்ததோ, அந்த காங்கிரஸ் கட்சியோடே கூட்டணி வைத்துக்கொண்டு, வரலாறு நெடுக தமிழர்களுக்கு துரோகம் இழைத்த திமுக, துரோகத்தைப் பற்றி பேசுவதா?

அஇஅதிமுக- பாஜக கூட்டணி என்பது தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு அமைக்கப்பட்ட கூட்டணி. அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மிக உறுதியாக சொல்கிறோம்- எங்களுடைய கொள்கை நிலைப்பாடுகளை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கின்ற இயகமல்ல அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்!

தமிழ்நாட்டிற்கு ஒன்று என்றால், நம் மாநில மக்களுக்கு ஒன்று என்றால், கொண்ட கொள்கை திராவிடத்திற்கு ஒன்று என்றால், இரத்தத்தில் கலந்துள்ள நம் தலைவர்களுக்கு ஒன்று என்றால், கொழுந்துவிட்டு பற்றி எரியும் தீ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டன்! உங்கள் தலைவரின் மனைவி, கோயில் கோயிலாக சென்று வழிபாடு நடத்துவதற்கும், இதே கேள்வியை, இதே சாயத்தை பூசுவாரா இந்த அறிவாலயத்துக் கிழட்டுப் பிண்டம்?

தமிழ்நாட்டிற்கு உண்மையில் துரோகம் இழைத்துக் கொண்டிருப்பது திமுக தான் என்பதை மக்கள் அறிவார்கள். அதை 2026ல் மக்கள் உங்களை விரட்டி அடிக்கும் போது புரியும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி.. பொறுப்புகளில் இருந்து நீக்கம்..?

RUPA

Next Post

சைபர் குற்றவாளிக்கு குண்டர் சட்டம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு..!!

Mon Jun 23 , 2025
சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசின் செயலுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் பானுமதி என்பவரிடம் இணையவழியில் ரூ.84.50 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பஞ்சாபைச் சேர்ந்தவொரு நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கடந்தாண்டு ஜூலையில் கைது செய்யப்பட்டார். இணையதள மோசடி வழக்கில் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை […]
supreme court 2025

You May Like