ஏழாவது திருமணத்திற்கு மணமேடைக்கு வந்த மோசடி பெண், ஆறாவது கணவரின் புத்திசாலித்தனத்தால் போலீசில் சிக்கினார்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனபால் (35) என்பவருக்கும், மதுரையை சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் கடந்த 7ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தை, மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்ற தரகர் ஏற்பாடு செய்திருந்தார். திருமணத்தில் பெண் வீட்டார் சார்பில், பெண்ணின் அக்கா, மாமா ஆகிய இருவர் மட்டும் வந்துள்ளனர். அவர்களும், புரோக்கரும் திருமணம் முடிந்த கையோடு, ரூ.1.50 லட்சம் கமிஷன் வாங்கிச் சென்றுள்ளனர். பின்னர் தனபால், சந்தியாவுடன் புது வாழ்க்கையை துவங்கினார்.

இந்நிலையில், 9ஆம் தேதி காலை, தனபால் தூங்கி எழுந்து பார்த்த போது, சந்தியாவை காணவில்லை. பீரோவில் வைத்திருந்த கல்யாண பட்டுப்புடவை, நகைகள், தான் கொண்டு வந்த துணிகளை எடுத்துக் கொண்டு சந்தியா மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து, தனபால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணத்துக்கு பெண் பார்த்தபோது சந்தியாவின் போட்டோ வந்துள்ளது. அதைப்பார்த்த தனபால், தன்னை ஏமாற்றியவர்களை வளைக்க திட்டமிட்டார். இதையடுத்து, தரகரிடம் உறவினர்கள் மூலம், வேறு நபருக்கு திருமணம் செய்ய பேசி உள்ளார். போட்டோக்களை மட்டும் பார்த்து, போனிலேயே திருமணம் நிச்சயம் செய்து, நேற்று காலை திருச்செங்கோட்டில் திருமணம் நடப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மணப்பெண் சந்தியா, தரகர், அவரது உறவினர் அய்யப்பன் ஆகியோர் திருச்செங்கோடு வந்தனர். ஆனால், அங்கு தனபால் மற்றும் அவரது உறவினர்கள் இருப்பதைக் கண்டு சந்தியா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சந்தியாவையும், அவருடன் வந்தவர்களையும் பிடித்து தனபால் போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சந்தியாவுக்கு தனபாலுடன் சேர்த்து, இதுவரை 6 பேருடன் திருமணம் நடந்தது தெரியவந்தது. சந்தியா, அவரது கூட்டாளிகள், யாரையாவது திருமணம் செய்து, இரண்டு நாட்கள் மட்டும் குடும்பம் நடத்திவிட்டு, கிடைத்ததையும், புரோக்கர் கமிஷனையும் பெற்று கம்பி நீட்டுவதை தொழிலாக கொண்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மொத்த கும்பலையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.