தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அக்டோபர் மாத இறுதியில் உருவான ‘மோன்தா’ புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்தபோதும், தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவானது. அக்டோபர் மாதத்தில் மட்டும் வடகிழக்குப் பருவமழையின் அளவு இயல்பை விட 58% அதிகமாக பதிவாகி இருந்த நிலையில், தற்போது அடுத்தடுத்த மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இருப்பினும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் விட்டு விட்டு மிதமான மழை முதல் கனமழை வரை அவ்வப்போது பதிவாகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் கணிசமாகக் குறைந்து காணப்படுகிறது.
இந்தச் சூழலில், வரும் நாட்களில் வங்கக் கடலில் தொடர்ந்து இரண்டு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த வானிலை மாற்றம் காரணமாக, நவம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் மீண்டும் தீவிரமடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



