சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் தற்போதைய பேசுபொருளாக இருக்கும் நடிகர் விஜய்யின் எதிர்காலம் குறித்து “அனலி” படத்தின் நாயகி சிந்தியா லூர்டே அதிரடியான கருத்துக்களை தெரிவித்துள்ளார். ‘அனலி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், தமிழக அரசியல் களத்தில் விஜய்யின் பயணம் குறித்துப் பலரும் விவாதித்து வரும் நிலையில், அவர் மீண்டும் திரையுலகிற்குத் திரும்புவார் என சவால் விடுத்துள்ளார்.
நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்திற்காக சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், சிந்தியா லூர்டே அதனை மறுத்துப் பேசியுள்ளார். “விஜய் சார் சினிமாவை விட்டுப் போய்விட்டார் என பலரும் சொல்கிறார்கள். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் மீண்டும் நடிக்க வந்துவிடுவார். இது உறுதி. எனக்கு ஜோதிடம் தெரியும், அதன் அடிப்படையில் தான் இதை சொல்கிறேன். அவர் நடிகராகவே தொடர்வார்; எனது தயாரிப்பில் அவர் நடிக்கும் படத்தில் நானே அவருக்கு ஜோடியாக நடிப்பேன்” என சவால் விடும் தொனியில் பேசியுள்ளார்.
தனது சொந்த தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அனலி’ படம் குறித்துப் பேசிய சிந்தியா, 90-களில் விஜயசாந்தி ஆக்ஷன் படங்களில் கலக்கியதை போல, தான் இந்த படத்தில் ஒரு முழுநீள ஆக்ஷன் ஹீரோயினாக களமிறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். நாயகர்களே செய்ய தயங்கும் ஆபத்தான சண்டை காட்சிகளில் கூட டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நடித்திருப்பதாக கூறினார். இந்த படத்தில் வழக்கமான கதாநாயகி கதாபாத்திரம் கிடையாது; இது மிகவும் தனித்துவமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடும் ‘அனலி’ திரைப்படம் ஜனவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பொங்கல் போட்டியில் மற்ற படங்கள் இருந்தாலும், தனது படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



