’ஷாருக்கானுக்கு எந்த மாதிரி கதாபாத்திரம் செட் ஆகும் என்ற யோசனை வந்ததும் நானே அவரிடம் சென்று கேட்பேன்’ என்று இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
’பொன்னியின் செல்வன்’ படத்தின் புரொமோஷன் பணிக்காக பான் இந்தியா முழுவதும் படக்குழு சுற்றி சுழன்றுக் கொண்டிருக்கிறது. அப்போது, பொன்னியின் செல்வன் படபிடிப்பின் போது நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள் குறித்தும், வரலாற்று நினைவலைகள் குறித்தும் நட்சத்திரங்கள் பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில், பாலிவுட்டின் பிங்க்வில்லா ஊடகத்திற்கு அளித்த பேட்டியின் போது ஷாருக்கானுடன் மீண்டும் இணைந்து படம் எடுக்கப்போவது குறித்து இயக்குநர் மணிரத்னத்திடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அப்போது அவர் அளித்த பதில்தான் தற்போது சினிமா வட்டாரத்தில் வட்டமடித்து வருகிறது.

அதன்படி, ஷாருக்கானை வைத்து மீண்டும் படமெடுப்பதற்கான வாய்ப்பிருக்கிறதா என இயக்குனர் மணிரத்னத்திடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, சிரித்துக்கொண்டே “முதலில் ஷாருக்கானிடம்தான் கேட்க வேண்டும். அவருக்காக ஒரு ஸ்கிரிப்ட் தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் நான் அவரிடம் சொல்ல முடியும். ஆகவே, இவை அனைத்தும் ஸ்கிரிப்ட்டின் கையில்தான் இருக்கிறது. நாங்கள் இருவரும் அண்மையில் சந்தித்தோம், அவ்வளவுதான். முழுக்க முழுக்க ஸ்க்ரிப்டிங்கில்தான் இருக்கிறது. ஷாருக்கிற்கு எந்த மாதிரி கதாப்பாத்திரம் செட் ஆகும் என்ற யோசனை வந்ததும் நானே அவரிடம் சென்று கேட்பேன்” என மணிரத்னம் கூறியுள்ளார்.

முன்னதாக 1998ஆம் ஆண்டு இந்தியில் தில் சே மற்றும் தமிழில் உயிரே என்ற பெயரில் வெளியான ஷாருக்-மணிரத்னம் படம் 2 தேசிய விருதுகள் மற்றும் 6 ஃப்லிம்ஃபேர் விருதுகள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.