அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 133ஆக உயர்ந்துள்ளது.
அகமதாபாத் விமான நிலையம் அருகே இன்று மதியம் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. 232 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களுடன் ஏர் இந்தியா விமானம் இன்று மதியம் 1.17 மணிக்கு லண்டனுக்குப் புறப்பட்டபோது இந்த கோர விபத்து நடந்தது. இந்த விபத்தில் முதலில் 30 பேர் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை சுமார் 133 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது… மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
விபத்துக்குள்ளான விமானத்தில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் குடிமக்கள், 7 போர்த்துகீசியர்கள், கனடாவை சேர்ந்த ஒருவரும் இருந்தனர். விபத்து நடந்த உடன் அகமதாபாத்தில் உள்ள மேகனிநகர் பகுதிக்கு அருகிலுள்ள தார்பூரில் இருந்து கடுமையான புகை வெளியேறியது. இதனால் அந்த பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காட்சியளித்தது. தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர், அவசரகால மீட்புக் குழுக்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடுவிடம் விபத்து குறித்து பேசினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதை உறுதி செய்யுமாறு இரு அமைச்சர்களையும் பிரதமர் கேட்டுக் கொண்டார். இன்று முன்னதாக, ஷா, விபத்தைத் தொடர்ந்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுடனும் பேசினார். மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்திய அவர், தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று குஜராத் புறப்படுகிறார். தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ அகமதாபாத்தில் நடந்த துயரமான விமான விபத்தால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வேதனை அடைந்தேன். பேரிடர் மீட்புப் படைகள் விபத்து நடந்த இடத்திற்கு விரைவாக விரைந்துள்ளன. நிலைமையை மதிப்பிடுவதற்காக குஜராத் முதல்வர் ஸ்ரீ பூபேந்திர படேல், உள்துறை அமைச்சர் ஸ்ரீ ஹர்ஷ் சங்கவி மற்றும் அகமதாபாத் காவல்துறை ஆணையர் ஆகியோருடன் பேசினேன்” என்று பதிவிட்டுள்ளார்..
Read More : ஏர் இந்தியா கோர விபத்து.. போயிங் 787-8 ட்ரீம்லைனர் விபத்தில் சிக்கியது இதுவே முதன்முறை..