அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே, ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.38-க்கு மணிக்கு லண்டனுக்கு புறப்பட்ட இந்த விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களுக்குள் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்திற்கு அருகே உள்ள மேகனிநகர் என்ற குடியிருப்பு பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விமானம் வீடுகளின் மேல் விழுந்ததால் வீடுகளில் இருந்தவர்களும் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
2 விமானிகள் மற்றும் 10 கேபின் பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்துள்ளனர். அனுபவமிக்க கேப்டன் சுமீத் சபர்வால் தலைமையில் முதல் அதிகாரி கிளைவ் குந்தர் தலைமையில் இந்த விமானம் இயங்கி வந்ததாக விமான போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அகமதாபாத் விமான நிலையம் மூடப்பட்டது.
விமான விபத்து குறித்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மாநில உள்துறை அமைச்சர் மற்றும் காவல்துறை ஆணையரிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்திய அவர் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக அறிவித்தார்.
இந்த நிலையில் விமான விபத்து தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. 1800 222 271, 1800 5691 444 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் செல்லவிருந்த விமானம் என்பதால் இதில் பிரிட்டனை சேர்ந்த 53 பேர், போர்ச்சுகலை சேர்ந்த 7 பேர், கனடாவை சேர்ந்த ஒருவரும் இருந்ததாக கூறப்படுகிறது.
Read More : ஏர் இந்தியா விமான விபத்து.. இதுவரை 30 பேர் உயிரிழப்பு.. பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அச்சம்..