அகமதாபாத் விமான விபத்தில் 133 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே, ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பயணிகள் இருந்ததாக மாநில காவல்துறை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். தற்போதைய தகவலின்படி இந்த விபத்தில் 133 பேர் உயிரிழந்துள்ளனர். அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.38-க்கு மணிக்கு லண்டனுக்கு புறப்பட்ட இந்த விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களுக்குள் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடுவிடம் விபத்து குறித்து பேசினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதை உறுதி செய்யுமாறு இரு அமைச்சர்களையும் பிரதமர் கேட்டுக் கொண்டார். இன்று முன்னதாக, ஷா, விபத்தைத் தொடர்ந்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுடனும் பேசினார். மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்திய அவர், தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறினார்.
133 பேர் உயிரிழந்த விமான விபத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் ஏற்பட்ட சோகம் “வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இதயத்தை உடைக்கிறது” என்று பிரதமர் கூறினார். எக்ஸ் தள பதிவில், “அகமதாபாத்தில் நடந்த சோகம் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, வருத்தப்படுத்தியுள்ளது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இதயத்தை உடைக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகப் பணியாற்றும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
Read more: அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து.. பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு.. குஜராத் விரையும் அமித் ஷா..