அதிமுக உட்கட்சி விவகாரத்தில் எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள கூடாது எனவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் முடிவுக்கு வரும் வரையில் கட்சிக்கு இரட்டை சிலை சின்னம் ஒதுக்ககூடாது என ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்கு மனுக்கள் அனுப்பப்பட்டது..
இந்த மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு விதிப்படி, ஒரு அரசியல் கட்சியில் இருவேறு பிரிவுகள் இருந்தால், எந்த பிரிவு உண்மையான கட்சி என்று விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் எனவே இதுகுறித்து விசாரிக்கலாம் என்றூம் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள புதிய மனுவில், உரிய காலத்திற்குள் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டிய சூழல் உள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டி உள்ளதாலும் இந்த காலக்கெடுவை நிர்ணயிக்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, அதிமுக உட்கட்சி விவகாரத்தில் எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Read More : FLASH| புதுச்சேரியில் பாஜக நியமன MLA-க்கள் திடீர் ராஜினாமா..? – பரபரக்கும் அரசியல் களம்