மின்சாதனப் பொருட்கள் பழுது பார்க்கும் கடையில் ஏற்பட்ட கம்ப்ரசர் வெடிப்பில் கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு திருமஞ்சன வீதியை சேர்ந்த பாலாஜி (வயது 53), காமராஜர் பஸ்நிலையம் அருகே ஏ.சி., பிரிட்ஜ் போன்ற மின்சாதன பொருட்கள் பழுதுபார்க்கும் கடை ஒன்றை நடத்தி வந்தார். அவருடன், 26 வயதான கணேஷ் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று (ஜூன் 12) மதியம், கடையில் பழுது பட்டிருந்த ஒரு குளிர்சாதனப் பெட்டியில் (பிரிட்ஜ்) பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பாலாஜி, அதில் இணைக்கப்பட்டிருந்த கம்ப்ரசர்வெடித்ததால் பெரும் விபத்து ஏற்பட்டது. அப்போது அருகில் இருந்த ஊழியர் கணேஷுக்கும் படுகாயம் ஏற்பட்டது.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸை அழைத்து, இருவரையும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள், பாலாஜி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக அறிவித்தனர். கணேஷ் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரிட்ஜ்களில் கம்ப்ரசர் என்பது குளிரூட்டலில் முக்கிய பங்கு வகிக்கிறது. அது சரியான பராமரிப்பு இல்லாமல் அதிக வெப்பத்தில் இயங்கும்போது வெடிக்கும் அபாயம் உள்ளது. பழுது நீக்கும் போது கூட கம்ப்ரசர் வெடிக்கும் சம்பவங்கள் அவ்வபோது நிகழ்ந்துள்ளன. பிரிட்ஜ், ஏ.சி. போன்ற சாதனங்களில் பழுது வந்தால், அதிக அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப நிபுணர்களிடம் மட்டுமே சரிசெய்யும் பணிகளை ஒப்படைப்பது மிக அவசியம். பாதுகாப்பு கருவிகள் இல்லாமல் இதுபோன்ற சாதனங்களில் வேலை செய்வது உயிருக்கு ஆபத்தானதாகும்.
Read more: ஈரான் மீது மீண்டும் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்.. போர் மூளும் அபாயம்..