விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து தரவுகள் மீட்டெடுக்கப்பட்டு பதிவிறக்கம் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே உள்ள ஒரு சில நிமிடங்களிலேயே மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உட்பட 270 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்த ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் தப்பினார்.
இதை தொடர்ந்து ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணங்களை ஆராய ஒரு உயர் மட்டக் குழு மத்திய அரசால் அமைக்கப்பட்டது, மேலும் விசாரணை சுமூகமாக நடந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. விபத்து நடந்த ஒரு நாளுக்குப் பிறகு, ஜூன் 13 அன்று, 26 787-8 விமானங்கள் மற்றும் ஏழு 787-9 விமானங்களைக் கொண்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானப் படையின் கண்காணிப்பை அதிகரிக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டது.
கருப்பு பெட்டி மீட்பு
ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி ஜூன் 13 அன்று சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டது. இதை தொடர்ந்து விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியை விமான விபத்து புலனாய்வுப் பிரிவு ஆய்வு செய்து வருவதாக ஜூன் 24 அன்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு கூறியிருந்தார். மேலும் அது விசாரணைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் என்ற தகவலை அவர் நிராகரித்தார்.
கருப்பு பெட்டியின் தரவுகள் மீட்பு
இந்த நிலையில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் முன்பக்க கருப்புப் பெட்டியிலிருந்து தரவுகள் மீட்டெடுக்கப்பட்டு பதிவிறக்கம் செய்யப்பட்டதாக இன்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. காக்பிட் வாய்ஸ் ரெக்காடர்கள் (CVR), ஃபிளைட் டேட்டா ரெக்காடர் (FDR) ஆகியவற்றின் தரவுகள் மீட்கப்பட்டுள்ளது.
கருப்புப் பெட்டித் தரவை விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) பகுப்பாய்வு செய்யத் தொடங்கியுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
CVR மற்றும் FDR ஆகியவை 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு மற்றும் CCTV கண்காணிப்பின் கீழ் பாதுகாக்கப்பட்டதாகவும், பின்னர் ஜூன் 24 அன்று இந்திய விமானப்படை (IAF) விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் “ கருப்புப் பெட்டிகள் அகமதாபாத்தில் இருந்து டெல்லிக்கு முழு பாதுகாப்புடன் IAF விமானம் மூலம் ஜூன் 24, 2025 அன்று கொண்டு வரப்பட்டன. முன்பக்க கருப்புப் பெட்டி 24 ஜூன் 2025 அன்று மதியம் 1400 மணிக்கு AAIB இன் இயக்குநர் ஜெனரல் (DG) உடன் டெல்லியில் உள்ள AAIB ஆய்வகத்திற்கு வந்து சேர்ந்தது.
அன்று மாலை, AAIB இன் இயக்குநர் ஜெனரல் தலைமையிலான குழு, AAIB மற்றும் அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் (NTSB) தொழில்நுட்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து, கருப்பு பெட்டியில் இருந்து மீட்கப்பட்ட தரவுகளை பிரித்தெடுக்கும் செயல்முறையைத் தொடங்கியது. முன் கருப்புப் பெட்டியிலிருந்து விபத்து பாதுகாப்பு தொகுதி (CPM) பாதுகாப்பாக மீட்டெடுக்கப்பட்டது, மேலும் 25 ஜூன் 2025 அன்று, நினைவக தொகுதி வெற்றிகரமாக அணுகப்பட்டு அதன் தரவு AAIB ஆய்வகத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டது,” என்று கூறப்பட்டுள்ளது.
CVR மற்றும் FDR தரவுகளின் பகுப்பாய்வு தற்போது நடைபெற்று வருவதாகவும் மத்திய அரச் தெரிவித்துள்ளது. விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் வரிசையை மறுகட்டமைப்பதும், விமானப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், எதிர்கால நிகழ்வுகளைத் தடுப்பதற்கும் பங்களிக்கும் காரணிகளைக் கண்டறிவதும் இந்த முயற்சி உதவும் என்றும் கூறி உள்ளது.
கருப்புப் பெட்டி என்பது ஒரு விமானம் அதன் பயணத்தின் போது தகவல்களைப் பதிவு செய்யும் ஒரு சிறிய சாதனம். இது விமான விபத்துகள் குறித்த விசாரணைக்கு உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.