இன்று அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
ஏர் இந்தியாவின் AI 159 என்ற விமானம் புது தில்லியில் இருந்து அகமதாபாத்திற்கு வந்து லண்டனுக்குப் புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஜூன் 12 அன்று அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தை தொடர்ந்து, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட 2வது அகமதாபாத்-லண்டன் ஏர் இந்தியா விமானம் இதுவாகும்.
இதனிடையே அகமதாபாத் விபத்தை தொடர்ந்து, ஏர் இந்தியாவின் பல விமானங்கள் தொழில்நுட்ப கோளாறுகளை சந்தித்து வருகின்றன. செயல்பாட்டுக் கோளாறுகள் காரணமாக ஏற்பட்ட தாமதங்களை அடுத்து, நேற்று ஏர் இந்தியாவின் மற்றொரு விமானம் ரத்து செய்யப்பட்டது.
அதே போல் நேற்றைய தினம் ஏர் இந்தியா விமானம் நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஹாங்காங்கிற்கு திரும்பியது. இதை தொடர்ந்து புதுடெல்லிக்குச் சென்ற விமானம் ஹாங்காங்கில் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், “மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக” சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் ஏர் இந்தியா தெரிவித்தது.
நேற்று, டெல்லியில் இருந்து ராஞ்சிக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், சந்தேகத்திற்குரிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தேசிய தலைநகருக்குத் திருப்பி விடப்பட்டது.
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை, சான் பிரான்சிஸ்கோவிலிருந்து மும்பைக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானத்தின் இயந்திரங்களில் ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் கொல்கத்தா விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கினர்.
கடந்த 12-ம் தேதி போயிங் 787-8 ட்ரீம்லைனர் (AI171) விமானம், சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள சில கட்டிடங்களில் மோதி தீப்பிடித்து எரிந்தது. கடந்த 30 ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான அகமதாபாத் விபத்தில் விமானத்தில் இருந்தவர்கள் 241 பேர் தரையில் இருந்த 29 பேர் என மொத்தம் 270 பேர் உயிரிழந்தனர். இதில், 119 பேரின் உடல்கள் டிஎன்ஏ பொருத்தம் மூலம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட அவர்களில் 76 பேரின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Read More : மீண்டும் தொழில்நுட்பக் கோளாறு.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்.. இந்த முறை எங்கு?