ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 297ஆக உயர்ந்துள்ள நிலையில், பிரதமர் மோடி காயமடைந்தவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அகமதாபாத் விமான விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 297 ஆக உயர்ந்துள்ளது. விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது, ஒரே ஒரு பயணி மட்டுமே இந்த துயர சம்பவத்தில் உயிர் தப்பினார். இறந்தவர்களில் 229 பேர் பயணிகள் மற்றும் 12 பேர் விமான ஊழியர்கள். மேலும், விமானம் ஒரு மருத்துவக் கல்லூரியின் விடுதியில் மோதியதில், அப்போது அங்கிருந்த 56 பேர் உயிரிழந்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் தரையிறங்கி விபத்து நடந்த இடத்தைப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களையும் அவர் சந்தித்து அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு, மத்திய இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் மற்றும் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோர் உடன் உள்ளனர்..
விபத்து குறித்து அதிர்ச்சியையும் வருத்தத்தையும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார் “அஹமதாபாத்தில் நடந்த சோகம் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, வருத்தப்படுத்தியுள்ளது. இது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. இந்த சோகமான நேரத்தில், அதனால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பாடுபடும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன்,” என்று பிரதமர் நேற்று ட்வீட் செய்தார்.
நேற்று, உள்துறை அமைச்சர் அமித் ஷா நிலைமையை மதிப்பிடுவதற்காக சம்பவ இடத்திற்குச் சென்றார். இதற்கிடையில், விபத்து குறித்த விசாரணை வேகமெடுத்துள்ளது. சம்பவம் குறித்து விசாரிக்க அரசாங்கம் உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது.
இந்த விமான விபத்தில் இறந்தவர்களில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவர் ஆவார். அவர் தனது குடும்பத்தினரைச் சந்திக்க லண்டனுக்கு சென்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் விபத்தில் சிக்கினார்..
நேற்று என்ன நடந்தது?
நேற்று மதியம் 1.38 மணியளவில், லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில நிமிடங்களிலேயே ஒரு குடியிருப்புப் பகுதியின் மீது விழுந்து வெடித்து சிதறியது. விமானம் லண்டனுக்கு பறக்கத் தயாராக இருந்ததால் விமான எரிபொருள் நிரப்பப்பட்டதே தாக்கத்தை அதிகப்படுத்தியதாகத் தெரிகிறது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, விமானி “Mayday” என்று கூறப்படும் அவசர அழைப்பை அனுப்பினார், ஆனால் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு விமானத்தைத் தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்தபோதும் எந்த பதிலும் இல்லை என்பதும் தெரியவந்தது.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு, நிலைமையை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாகவும், அனைத்து விமானப் போக்குவரத்து மற்றும் அவசரகால மீட்பு நிறுவனங்களுக்கும் விரைவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாகவும் கூறினார். “எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் விமானத்தில் உள்ள அனைவருடனும் அவர்களது குடும்பத்தினருடனும் உள்ளன,” என்று அவர் X பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஒரு அறிக்கையில், 8,200 மணிநேர அனுபவமுள்ள கேப்டன் சுமீத் சபர்வால் மற்றும் 1,100 மணிநேர அனுபவமுள்ள முதல் அதிகாரி கிளைவ் குந்தர் ஆகியோரால் இயக்கப்பட்ட விமானம் விபத்துக்கு முன்பு, ஒரு Mayday அழைப்பை மேற்கொண்டதாக தெரிவித்திருந்தது.