இன்று விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் இருந்த 242 பயணிகள் மற்றும் பணியாளர்களில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.
அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் இருந்த 242 பயணிகள் மற்றும் பணியாளர்களில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது என்று போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். 11A என்ற சீட்டில் இருந்த விஸ்வாஸ் என்ற பயணி உயிர் பிழைத்துள்ளார். இவர் பிரிட்டன் குடியுரிமை வைத்திருப்பவர் என்றும், இந்தியாவில் தனது குடும்பத்தினருடன் சில நாட்கள் தங்கிவிட்டு லண்டன் சென்ற போது விபத்தில் சிக்கி உள்ளார். எனினும் அவருக்கு கழுத்து, கண், பாதங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
லண்டனுக்குச் சென்று கொண்டிருந்த விமானம், இன்று பிற்பகல் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. ஏர் இந்தியா விமானம் சம்பந்தப்பட்ட துயரமான விமான விபத்தில் கணிசமான எண்ணிக்கையிலான உயிர்கள் உயிரிழந்ததை வெளியுறவு அமைச்சகம் (MEA) உறுதிப்படுத்தியது.
வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பேசிய போது, “அகமதாபாத்தில் நடந்தது மிகவும் துயரமான விபத்து. நாம் நிறைய பேரை இழந்துவிட்டோம். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். பல வெளிநாட்டினர் உள்ளனர். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், ஏர் இந்தியா நிறுவனத்திடம் இருந்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும். மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. சரியான விவரங்கள் வெளிவர இன்னும் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்…” என்று தெரிவித்தார்.
ஏர் இந்தியா விமானம் விபத்து :
இன்று பிற்பகல் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஏர் இந்தியாவின் கூற்றுப்படி, அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லும் போயிங் 787-8 விமானத்தில் 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர். இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் பிரஜைகள், ஏழு போர்த்துகீசியர்கள் மற்றும் ஒருவர் கனடாவை சேர்ந்தவர்.
ஏர் இந்தியா தனது ‘X’ பக்கத்தில் “ அகமதாபாத்திலிருந்து லண்டன் சென்ற ‘ஏர் இந்தியா AI 171’ விமானத்தில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ்காரர்கள், கனடா நாட்டை சேர்ந்த ஒருவர், போர்த்துகீசிய நாட்டை சேர்ந்த 7 பேர் இருந்தனர். அகமதாபாத்திலிருந்து மதியம் 13.38 மணிக்குப் புறப்பட்ட விமானத்தில், 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். மேலும் தகவல்களை வழங்க 1800 5691 444 என்ற பிரத்யேக பயணிகள் ஹாட்லைன் எண்ணையும் நாங்கள் அமைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்து விசாரிக்கும் அதிகாரிகளுக்குமுழு ஒத்துழைப்பையும் அளிப்பதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது..
Read More : ஏர் இந்தியா விமான விபத்துக்கு இது தான் காரணம்.. ஆனா அதை இப்ப உறுதிப்படுத்த முடியாது.. நிபுணர்கள் தகவல்..