‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற உன்னத தத்துவத்தைக் கொண்ட போகிப் பண்டிகை, சென்னையில் இன்று ஒரு சூழலியல் பேரழிவாக மாறியுள்ளது. பிளாஸ்டிக், டயர்கள் மற்றும் ரசாயனப் பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும் என பலகட்ட விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும், இன்று அதிகாலை முதல் சென்னை மாநகர் முழுவதும் கடும் புகை மூட்டத்தில் சிக்கி தவிக்கிறது. இந்த மோசமான சூழலால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் சுவாசப் பிரச்சனைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையின் காற்றுத் தரக் குறியீடு (AQI) இன்று சில பகுதிகளில் 952 என்கிற அபாயகரமான அளவை எட்டியுள்ளது. இது ஒரு சராசரி மனிதன் ஒரே நாளில் 44 சிகரெட்டுகளை புகைப்பதற்கு இணையான பாதிப்பை ஏற்படுத்தும் என சூழலியல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். பொதுவாக தீபாவளி பண்டிகையின் போது மட்டுமே காணப்படும் இத்தகைய நச்சுப் புகை, இன்று போகிப் பண்டிகையிலும் எதிரொலிப்பது சென்னைவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நுண்புறத் துகள்களான PM2.5 மற்றும் PM10 ஆகியவற்றின் அளவு பலமடங்கு அதிகரித்திருப்பதால், காற்றில் நச்சுத்தன்மை உச்சமடைந்துள்ளது. காற்று மாசு அளவீட்டின்படி 0-50 வரை இருப்பது மட்டுமே ‘நல்லது’ எனக் கருதப்படுகிறது. ஆனால், சென்னையில் தற்போது பதிவாகியுள்ள 400-க்கும் மேலான அளவீடுகள் ‘கடுமையான பாதிப்பு’ (Severe) என்ற பிரிவின் கீழ் வருகிறது. 900-ஐ தாண்டிய குறியீடு என்பது ஆரோக்கியமான மனிதர்களுக்கே நுரையீரல் மற்றும் இதய பாதிப்புகளை தரக்கூடியது.
இத்தகைய சூழலில், பொதுமக்கள் குறிப்பாக அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும், வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சென்னையின் 15 இடங்களில் காற்றுத் தரத்தைக் கண்காணித்து வந்தாலும், தனியார் அமைப்புகளின் தரவுகள் காட்டும் இந்த 952 என்ற எண் சென்னையின் எதிர்காலச் சுகாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.



