டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள NCR பகுதிகளில் காற்று மாசுபாடு ஆபத்தான அளவை எட்டியுள்ள நிலையில், அது நுரையீரல் மற்றும் இதய பாதிப்புகளை மட்டுமல்லாமல், ஆண்கள் மற்றும் பெண்களின் கருவுறுதலையும் கடுமையாக பாதிக்கக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் டெல்லியில் PM2.5 மாசுத் துகள்களின் சராசரி அளவு ஒரு கன மீட்டருக்கு 215 மைக்ரோகிராம் ஆக உயர்ந்துள்ளது. இது அக்டோபர் மாத அளவைவிட கிட்டத்தட்ட இரட்டிப்பாகும். பல நாட்களாக காற்றின் தரக் குறியீடு (AQI) 400ஐத் தாண்டி ‘மிகவும் மோசமான’ நிலையில் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மூச்சுத்திணறல், தலைவலி, சோர்வு போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சண்டிகரில் உள்ள ஜிண்டால் IVF நிறுவனத்தின் மூத்த ஆலோசகரும் மருத்துவ இயக்குநருமான டாக்டர் ஷீத்தல் ஜிண்டால், “டெல்லி காற்றில் தூசி மட்டுமல்ல; சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற நச்சு வாயுக்கள், ஈயம், தாமிரம் போன்ற கன உலோகங்கள் மற்றும் தொழில்துறை ரசாயனங்கள் கலந்துள்ளன. இவை அனைத்தும் சுவாசத்தின் மூலம் மனித உடலுக்குள் நுழைகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
மாசுபாட்டால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் (Oxidative Stress) உடலில் ஹார்மோன் சமநிலையை சீர்குலைப்பதாகவும், இது பெண்களில் அண்டவிடுப்பின் எண்ணிக்கை, கருவைப் பதிய வைக்கும் திறன் மற்றும் ஆரம்பகால கர்ப்பத்தை பாதிக்கக்கூடும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
IVF சிகிச்சை மேற்கொண்ட பெண்களிடையே செய்யப்பட்ட ஆய்வுகளில்,
- நைட்ரஜன் டை ஆக்சைடு, ஓசோன் – குறைந்த பிறப்பு விகிதம்
- பெரிய துகள்கள் (PM10) – கருச்சிதைவு அபாயம்
- PM2.5 – கருத்தரிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் நிலை
என்பன தொடர்புடையதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஆண்களின் கருவுறுதலுக்கும் ஆபத்து: சுற்றுச்சூழல் மாசுபாடு ஆண்களின் விந்தணு தரத்தையும் பாதிக்கிறது. கன உலோகங்கள் மற்றும் ரசாயனங்கள் விந்தணு இயக்கம், எண்ணிக்கை மற்றும் DNA அமைப்பை சேதப்படுத்தக்கூடும். மேலும், ஹார்மோன் சுரப்பை பாதிக்கும் ரசாயனங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை குறைத்து, மலட்டுத்தன்மை அபாயத்தை அதிகரிக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்: மருத்துவர்கள் கூறுவதாவது:
- வீட்டில் காற்று சுத்திகரிப்பான்களை பயன்படுத்துதல்
- மாசு அதிகமான நாட்களில் வெளியே செல்லாமல் இருப்பது
- வைட்டமின் C, E போன்ற ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு உணவுகளை உணவில் சேர்த்தல்
- மனஅழுத்தம் குறைத்தல், உடற்பயிற்சி
- ஹார்மோன் மற்றும் இனப்பெருக்க சோதனைகள் மேற்கொள்வது
போன்ற நடவடிக்கைகள் அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



