வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திருச்சியைச் சேர்ந்த கேர் கன்சல்டன்சி (Care Consultancy) என்ற நிறுவனம் தாய்லாந்து நாட்டில் நல்ல சம்பளம் கொடுத்து வேலைக்கு ஆட்கள் தேவைப்படுதாக இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளது. இதனை நம்பி வேலைக்கேட்ட 18 பேரிடம் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை வசூலித்துள்ளனர். பின்னர் அந்த 18 பேரையும் சுற்றுலா விசாவில் துபாய் வழியாக பாங்காங் அழைத்துச் சென்று, அவர்களை கடத்திச் சென்று சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதில், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடத்தப்பட்ட அனைவரும் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கேர் கன்சல்டன்சி நிறுவனத்தின் முகவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல மற்றொரு கும்பலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது. அந்த கும்பலிடம் சிக்கியவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர். எனவே, தமிழக இளைஞர்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த மோசடி குறித்து பொதுமக்களுடன் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் அதிக ஊதியம் தருகிறோம் என்று அழைத்தால் அந்த நிறுவனத்தின் உண்மை தன்மையை அறியாமல் யாரும் செல்ல வேண்டாம். மேலும் சுற்றுலா பயண விசாவில் 6 மாதம் வேலை செய்ய வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்