மின் இணைப்பு துண்டிக்கப்படாமல் இருக்க உடனடியாக தொடர்பு கொள்க என்று ஏதேனும் குறுஞ்செய்தி வந்தால் பொதுமக்கள் பதிலளிக்க வேண்டாம் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “மின் கட்டணம் பாக்கி இருப்பதாகவும், அதை செலுத்தாத பட்சத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் பயனர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்புகிறார்கள். இதில், ஒரு மொபைல் எண் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கூடுதல் தகவலுக்கு இந்த எண்ணை அழைக்கும்படி அந்த மெசேஜில் கேட்கப்படுகிறது. தொடர்ந்து பல லட்ச ரூபாய் வரை மோசடி செய்பவர்கள், இந்த எண் மூலம் பயனர்களை தொடர்பு கொள்ள வைக்கின்றனர். மின்சார கட்டணம் பாக்கி இருப்பதாகக் கூறி அந்த பணத்தை செலுத்தும்படி அவர்களை பயனர்களை நம்ப வைக்கின்றனர். இதையடுத்து, மோசடியாளர்கள் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்கின்றனர். அதில், 10 ரூபாய் பணத்தை மட்டும் செலுத்த கூறுகிறார்கள்.

10 ரூபாயை செலுத்தும் பட்சத்தில் நம் செல்போனில் இருக்கக்கூடிய வங்கித் தரவுகள், ஓ.டி.பி. அனைத்தும் அவர்களுக்கு செல்கிறது. இதனைப் பயன்படுத்தி அவர்கள் நம் வங்கியில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். எனவே, பொதுமக்கள் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் . இதுபோன்று மெசேஜ் வந்தால் பதில் அளிக்க வேண்டாம்” என்று டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள வீடியோவில் எச்சரித்துள்ளார்.