பிரபல பேச்சாளரும் திராவிட இயக்க சிந்தனையாளருமான நாஞ்சில் சம்பத் மதிமுகவில் இருந்து விலகிய பின் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.. ஜெயலலிதா மறைவுக்கு பின் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட அவர் புதிய கட்சியை தொடங்கிய போது அதன் பெயரில் திராவிட அண்ணா பெயர்கள் இல்லாததால் அண்ணாவையும், திராவிடத்தையும் புறக்கணித்த இடத்தில் தனக்கு வேலை இல்லை எனக்கூறி இனி அரசியலில் இருந்தே விலகுவதாகக் கூறினார்..
பின்னர் மேடைகளில் திராவிட கொள்கைகளை பற்றி பேசி வந்த அவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து வந்தார்.. இந்த நிலையில் திமுக சார்பில் சென்னையில் திமுக 75 – அறிவுத்திருவிழா நடந்து வருகிறது.. இதில் திமுக பேச்சாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் நாஞ்சில் சம்பத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை..
நாஞ்சில் சம்பத் கடந்த சில நாட்களாகவே விஜய்யின் தவெகவுக்கு ஆதரவாக பேசி வந்ததாலேயே அவருக்கு அறிவுத்திருவிழாவில் பேச அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.. மேலும் திமுகவின் அறிவுத்திருவிழாவிற்கு அழைப்பு விடுக்கப்படாதது தனக்கு வருத்தம் தெரிவித்தார்.. 2026 தேர்தலில் திமுகவுக்கு தவெக தான் சவாலாக இருக்கும் என்றும் அதிமுக சவாலாக இருக்கும் என்றும் சமீபத்தில் கூறியிருந்தார். இதனால் நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது..
இந்த நிலையில் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த நாஞ்சில் சம்பத் தவெகவுக்கு செல்லும் எண்ணம் தனக்கு இல்லை என்று விளக்கம் அளித்தார்.. மேலும் “ தவெகவுக்கு தாவுவதற்கு.. நான் ஒன்றும் குரங்கு கிடையாது.. உச்சநீதிமன்றம் கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட போது இது தவெகவுக்கு கிடைத்த வெற்றி என்று ஒரு பேட்டியில் நான் கூறியிருந்தேன். கலங்கி போய் நிற்கும் தவெகவுக்கு அடுத்த அடி எடுத்த வைக்க உச்சநீதிமன்றம் ஒரு வாசலை திறந்து வைத்துள்ளது என்று சொன்னேன்.. இன்னும் நான் அதே கருத்தில் தான் இருக்கிறேன்..
விஜய்யை விமர்சிக்க வேண்டிய இடத்தில் நான் விமர்சிக்காமல் இருந்ததில்லை.. ஆனால் அந்த பேட்டிக்கு பிறகு திராவிட முன்னேற்ற கழகத்தில் சிலருக்கு என் மீது வருத்தம் இருக்கலாம்.. அந்த வருத்தத்தில் நியாயம் இருக்கிறது.. சம்பத் எதிராக போகிறாரோ என்று என் மீது கோபப்படவும் அவர்களுக்கு உரிமை உள்ளது.. ஆனால் ஒரு விமர்சகராக தான் அந்த கருத்தை வைத்தேன்.. தவெகவுக்கு தாவணும் என்றோ தவெகவுக்கு போக வேண்டும் என்பதோ என் நோக்கம் கிடையாது.. இப்போதும் நான் அதே மனநிலையில் தான் இருக்கிறேன்.. சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதற்காக தான் நான் திமுகவில் கூட சேரவில்லை.. ஆனால் இந்த தேர்தலில் திமுக வெற்றி பெறும்.” என்று தெரிவித்தார்..



