கீழடி பற்றிய உண்மைக்காக இடைவிடாமல் வேட்டையாடப்படுகிறார் அமர்நாத் இராமகிருஷ்ணன் என்று மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கீழடி அகழாய்வு இயக்குனராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணா நொய்டாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது டெல்லியில் இருந்து நொய்டாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கீழடியின் தொன்மை குறித்து ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு அறிக்கை அளித்திருந்தவர் அமர்நாத். ஆனால் அமர்நாத் ராமகிருஷ்ணாவின் அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது சர்ச்சையானது. மேலும் அவரின் அறிக்கையை மத்திய அரசு இதுவரை ஏற்கவில்லை.
இந்த நிலையில் கீழடி குறித்த உண்மையை கண்டறிந்ததற்காக அமர்நாத் இராமகிருஷ்ணன் இடைவிடாமல் வேட்டையாடப்படுகிறார் என்று மதுரை எம்பி. சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ தமிழின் தொன்மையையும், கீழடி உண்மையையும் வெளிக்கொண்டு வருவதில் உறுதியாக செயல்பட்ட தொல்லியல் அதிகாரி அமர்நாத் இராமகிருஷ்ணன் இப்பொழுது மீண்டும் இடமாற்றம். கண்டறியப்பட்ட உண்மைக்காக இடைவிடாமல் வேட்டையாடப்படுகிறார் அமர்நாத் இராமகிருஷ்ணன். ஒன்றிய அரசின் வஞ்சக செயல்களுக்கு தமிழக மக்கள் உரிய முறையில் பதில் அளிப்பார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்று தமிழக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். கீழடி ஆய்வு முடிவுகள் அங்கீகரிக்கப்படாதது ஏன் என்பது குறித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஷெகாவாத் சமீபத்தில் விளக்கம் அளித்தார். அப்போது அறிவியல் பூர்வமான ஆய்வுகள், முடிவுகள் வந்த பிறகே கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்க முடியும் என்றும். அதற்கு இன்னும் அதிகமான அறிவியல் பூர்வ முடிவு தேவை என்றும் தெரிவித்தார்.
மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்தின் தொன்மையை மத்திய அரசு தொடர்ந்து ஏற்க மறுக்கிறது என்று வரலாற்று ஆய்வாளர்களும், அரசியல் தலைவர்களும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த சூழலில் கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிட மறுக்கும் ஒன்றிய பாஜக அரசின் தமிழர் விரோத போக்கை கண்டித்து , திமுக மாணவரணி சார்பில் நாளை காலை 10 மணி அளவில் மதுரை , வீரகனூர் சுற்றுச்சாலையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக மாணவரணி சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்துவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம்! இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை! நாளை மதுரை வீரகனூரில், திமுக மாணவரணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி ஒன்றிய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம்! அவர்களைத் திருத்துவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
Read More : திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை! முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்..